இலக்கண வகுப்பு – 27,
தொல்:சொல்: இயல் – 7, இடையியல்
முதலில் சென்ற வகுப்பிலிருந்து மேலதிக விளக்கம் :
வினையெஞ்சு கிளவிகள்/பெயரெஞ்சு கிளவிகள் எத்தனையோ உள்ளன. அவற்றை எல்லாம் குறிக்க இயலாமையால், அவற்றை இலகுவில் தெரிந்து கொள்ள, அவைபோலவே குறிக்கப் படும் சொல் வடிவங்களே
‘ வாய்பாடுகள் ‘ ஆகும்.
நூற்பா 28 : செய் என்ற அடிப்படைக்குச் சொன்ன வாய்பாடுகள் இவை;
செய்து — உண்டு
செய்யூ/செய்பூ– தின்னூ, தின்பூ
செய்பு — உண்ணுபு
செய்தென — உண்ணென
உண்ணியர் — செய்யியர்
உண்ணிய — செய்யிய
உணின் — செயின்
உண்ண — செய
உணற்கு — செயற்கு
இவை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.
நூற்பா 234:
பெயரெஞ்சு கிளவி :
செய்யும், செய்த இரண்டும் பெயரெச்ச வாய்பாடுகள். இவை, நிலம் பொருள் காலம் கருவி வினைமுதல் வினை எனும் 6 பெயர்களைக் கொண்டு முடியும்.
வாழும் ஊர் — நிலம்
விளையும் பயிர் — பொருள்.
துயிலும் நேரம் — காலம்
எழுதும் கோல் — கருவி
படிக்கும் மாணவன் — வினைமுதல்.
உண்ணும் உணவு — வினை ( இவை ஆறும் ‘ செய்யும் ‘ என்ற வாய்பாடு)
படித்த பள்ளி — நிலம்
உண்ட சோறு — பொருள்
வந்த நாள் — காலம்
எய்த வேல் — கருவி
ஆடிய கூத்தன் — வினைமுதல்.
கூடிய கூட்டம் — வினை
( இவை ஆறும் ‘ செய்த ‘ என்ற வாய்பாடு)
இடையியல் – 7
பெயர்ச் சொற்களோடும் வினைச் சொற்களோடும் சார்ந்து நின்று, தனக்கென்று பொருளேதுமின்றி, அந்தந்தவிடத்துப் பொருள் தருவது ‘ இடைச்
சொல் ‘ ஆகும்.
சொற்களின் முன்னும் பின்னும் நிற்கும். இடையில் நிற்பதே பெரும்பான்மை என்றதால் ‘ இடைச்சொல்’
என்றானது.
இடைச்சொற்கள் தனித்தியங்கா. பெயர் வினைகளையே சார்ந்து, இடை என்ற இடத்தில் நிற்பதால் ‘ இடைச் சொல்’ என்கிறார் தெய்வச் சிலையார்.
நன்னூல் உரையாசிரியர்களில் ஒருவரான சங்கர நமச் சிவாயர் ” பெயர்ச் சொல்லுமாகாது, வினைச்
சொல்லுமாகாது, இரண்டின் வேறுமாகாமல், இடை நிற்பதால் ‘ இடைச்சொல் ‘ ஆயிற்று என்றார்.
1
தொல்காப்பியர் நூற்பா சொல்வதைப் பார்ப்போம்:
” இடையெனப் படுப பெயரொடும் வினையொடும் நடைபெற்
றியலும் தமக்கியல் பிலவே ” ( 249)
இ-ள்:
இடைச்சொல் என்று சொல்லப்படுவன, பெயரொடும் வினையொடும் வழக்குப் பெற்றியலும். தாமாக நடக்கும் இயல்பில எ-று
எ-டு:
” அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு ” ( வள்ளுவன், 1081)
அப்பரடிகளின் விடந்தீர்த்த பதிகம் இது:,
” ஒன்று கொல்ஆம் அவர் சிந்தை உயர்வதை
ஒன்று கொல்ஆம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொல்ஆம் இடுவெண் தலை கையது
ஒன்று கொல்ஆம் அவர் ஊர்வது தானே ..” ( தொடர்ந்து 9 பாடல்களிலும் 36 தடவைகள் ‘ கொல் ‘ என்ற இடைச்சொல் வருவது காண்க. இவ்விடம் ஐயப் பொருளில் வந்தது)
2
மேலும் பல இடைச் சொற்களைக் குறித்துள்ளார். இவற்றை நூற்பாவை மனங்கொண்டு உணர்ந்து கொள்க!
மன் இல் கொன் உம் ஓ. ஏ மற்று எற்று மன்ற எல் ஆர் குரை மா இரும் சின் அம்ம ஆங்க யா கா ஆக ஆகல் ஔ எனா என்றா எனப் பலவாம்.
3
‘ உம் ‘ என்ற இடைச்சொல் அமையும் விதம்.
” எச்சஞ் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை யாக்கமென்று
அப்பா லெட்டே உம்மைச் சொல்லே ” ( 255)
இ-ள்:
உம் என்ற இடைச்சொல் எட்டு வகை எ-று
1 எச்சவும்மை 2. சிறப்பும்மை
3 ஐயவும்மை 4 எதிர்மறை
உம்மை 5 முற்றும்மை
6 எண்ணும்மை 7 தெரிநிலையும்மை
8 ஆக்கவும்மை
எ-டு:
இலக்குவனும் வந்தான் – எச்சவும்மை
கற்றோரும் ஏத்தும் கலி — சிறப்பும்மை
இன்றேனும் நாளையேனும் தருவான் —
ஐயவும்மை
வாசன் செய்வதற்கும் உரியன் — எதிர்மறையும்மை
பாண்டவர் ஐவரும் வந்தனர் — முற்றும்மை
நிலமும் நீரும் தீயும் வளியும் வெளியும் எனப் பூதங்கள் ஐந்து — எண்ணும்மை
அவளும் அல்லள் இவளும் அல்லள் — தெரிநிலையும்மை
மெலியவன் வலியவனும் ஆனான் — ஆக்கவும்மை
4
ஓ என்ற இடைச்
சொல்லின் பயன்பாடு:
” பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி
சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப ஓகாரம்மே ” ( 256)
இ-ள்:
பிரிநிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு ஆகிய பொருளில் வரும் ஓகார இடைச்சொல் ஆறு வகைத்தாம் எ-று
எ-டு:
கோவலனோ கொண்டான்? — பிரிநிலை ஓகாரம்
நாதன் உண்டானோ? வினா ஓகாரம்
அவனோ சொற் கேட்பான்? — எதிர்மறை ஓகாரம்
வேலை செய்யவோ வந்தாய்? — ஒழியிசை ஓகாரம்
உன் சிந்தை நன்றோ தீதோ? அல்ல — தெரிநிலை ஓகாரம்
ஓ ஒ கம்பன் கல்வியிற் பெரியன் — சிறப்பு ஓகாரம்
கம்பன் தனிப்பாடல் ஒன்று :
” மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? — என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு “
— இவ் வகுப்பு நிறைவு —