திருவாசகம்

  • 19 திருத் தசாங்கம்

    19 திருத் தசாங்கம்
    பதிகச் சிறப்பு: அடிமை கொண்ட முறைமை
    யாப்பு: நேரிசை வெண்பா

    தலம்: கோயில் (சிதம்பரம்)
    இறைவர்: மூலநாதர்
    இறைவி: உமையம்மை
    இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

    தலக்குறிப்பு:
    கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
    சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன்
    செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
    எம்பெருமான் தேவர்பிரான் என்று 1

    ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
    நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் – காதலவர்க்கு
    அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
    தென்பாண்டி நாடே தெளி 2

    தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
    மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் – கோதாட்டிப்
    பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
    உத்தர கோசமங்கை யூர் 3

    செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
    ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் – தையலாய்
    வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
    ஆனந்தம் காணுடையான் ஆறு 4

    கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
    மஞ்சன் மருவும் மலைபகராய் – நெஞ்சத்து
    இருளகல வாள்வீசி இன்பமரு முத்தி
    அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து 5

    இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
    ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே – எப்போதும்
    தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
    வான்புரவி யூரும் மகிழ்ந்து 6

    கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்
    மாற்றாரை வெல்லும் படைபகராய் – ஏற்றார்
    அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும்
    கழுக்கடைகாண் கைக்கொள் படை 7

    இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
    முன்பால் முழங்கும் முரசியம்பாய் – அன்பாற்
    பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
    பருமிக்க நாதப் பறை 8

    ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
    மேய பெருந்துறையான் மெய்த்தாரென் – தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
    தாளிஅறு காம்உவந்த தார் 9

    சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
    கோலம் பொலியுங் கொடிகூறாய் – சாலவும்
    ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
    கோதிலா ஏறாங் கொடி 10

                             திருச்சிற்றம்பலம்