Class 3

இலக்கண வகுப்பு – 3
12/11/2025.

தொல்: எழுத்ததிகாரம், இயல் 2, மொழிமரபு.

மொழிமரபு – சுருக்க அறிமுகம்

குற்றியலிகரம்:
இகரம் தன் மாத்திரையிலும் குறுகி ஒலிப்பதே குற்றியலிகர மாகும். குற்றியலுகரத்தை அடுத்து யா வரும்புழி, அவ்வுகரம் இகரமாகும்.
எ-டு: நாகு+ யாது = நாகியாது.
கொக்கு + யாது = கொக்கியாது.
குரங்கு + யாது = குரங்கியாது.

குற்றியலுகரம் :

“நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே ” (3-36)

நெட்டெழுத்தின் பின்னாலும், தொடர்மொழி இறுதியிலும் வல்லாறுகளின் மேல் ஏறிவருவது குற்றியலு கரமாம்.
வல்லாறு – கசடதபற. அவற்றின் மேல் உகரம் ஏற, குசுடுதுபுறு எனக் குற்றியலுகரமாக ஒலிக்கும்.
எ-டு : நாகு ஆசு நாடு தூது திரிபு ஆறு. இங்கே உகரம் குறுகியமை காண்க.

அளபெடை :

“குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே ” (41-8)

இ-ள் : குன்றுவதான ஓசையுடைய அவ்வளபெடை எழுத்தாலான மொழிக்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும் அவை யாதெனில்; நெட்டெழுத்துகளின் பின்னாக இனமொத்த குற்றெழுத்துக்கள் ஆகும்.

எ-டு: ஆஅ. ஈஇ. ஊஉ. ஏஎ. ஓஒ எனவரும்.

அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டி ஒலிப்பதாகும். இங்கு ஆ வுக்கு 2 மாத்திரை, அ வுக்கு ஒரு மாத்திரை, இவ்விரண்டும் கூடி ஒலித்ததால் அதற்கு மூன்று மாத்திரையாம்.

அளபெடை 3 வகை :

1 செய்யுளிசை அளபெடை
2 சொல்லிசை அளபெடை
3 இன்னிசை அளபெடை

செய்யுளிடையே ஓசை குறைந்தவிடத்து, அதனை நிறைவு செய்யப் பயன் படுவது ‘ செய்யுளிசை அளபெடை ‘ ஆம்.


“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள்: பெய்யெனப் பெய்யும் மழை ” ( வள்ளுவர்)

ஒரு பெயர்ச் சொல்லை வினையெச்சமாக மாற்றுவது ‘ சொல்லிசை அளபெடை ‘ ஆகும்.

எ-டு : தொகை – தொகைஇ ( தொகுத்து)
வளை – வளைஇ ( வளைத்து)


” உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன் ” ( வள்ளுவன்)


( உரன் — வெற்றி. வரன் – வருகை. நசை – விருப்பம். இங்கு பெயர் வினை யெச்சமானது. )

” செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே “
( சிவஞானபோதம் நூற்பா 12)
கழீஇ – கழுவி. மரீஇ – மருவி இணைந்து.

ஒரு செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும், மேலும் இனிய ஓசை பெறும் பொருட்டு, குறில் எழுத்துகள் நெடில்களாகி அளபெடுத்தல் ‘ இன்னிசை அளபெடை ‘ ஆகும்.


“கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வார் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை” ( வள்ளுவன்)


து –> தூஉ என நெடிலாகி 3 மாத்திரை பெற்றது.
திரு முருகாற்றுப்படையில் நிறைய உண்டு.
(சென்னிப் பொற்ப நகை தாழ்பு துயல்வரூஉம் .. )

ஐகார ஔகார அளபெடை:

“ஐ ஔ என்னும் ஆயீ ரெழுத்திற்கு; இகர உகரம் இசைநிறை வாகும் ” (9-42)

ஐ ஔ என்ற இரண்டெழுத்திற்கும் ஒத்த
குற்றெழுத்துகள் இல்லாத காரணத்தால், இகரமும் உகரமும் வந்து நின்று ஒசை நிறைக்கும்.

எ-டு : ” சேண்விளங்கு இயற்கை வாண்மதி கலைஇ .. ” .. சீரை தைஇய
உடுக்கையர்… ” ( திருமுருகாற்றுப்படை)

ஓரெழுத் தொரு மொழி:
எழுத்துக்கள் சில ஓரெழுத்தாக நின்ற போதிலும், அவை மொழியாகவும் நிற்கும்.
” நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி ” ( 10-43)
எ-டு : ஆ – பசு, ஆன்மா
ஈ – கொடு, ஈ
ஊ.- ஊன்
ஏ – அம்பு
ஐ – தலைவன்
ஓ – மதகு
ஔ – பூமி, நிலம் ( கௌ உம் வரும் )
இவ்வாறு ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தாகவும் அதற்கு மேலும் வருமாயின், அவை
‘ பலவெழுத்தால் இசைக்கும் தொடர்மொழி ‘ எனப்படும் என்கிறார் தொல்காப்பியர். ( 11-45)

எ-டு :
மணி — ஈரெழுத் தொரு மொழி. ( தொடர்மொழி)
அழகு — மூவெழுத்தொரு மொழி. ( தொடர்மொழி)
கதிரொளி — நான்கெழுத் தொருமொழி. ( தொடர் மொழி)
அகத்தியனார் — ஐந்தெழுத்
தொருமொழி ( தொடர் மொழி)

போலி எழுத்துகள் :

” அகர இகரம் ஐகார மாகும் ” ( 21-54)

அகரத்தையும் இகரத்தையும் கூட்டிச் சொல்ல, அது ஐகாரம் போல ஒலிக்கும்.

எ-டு :
அஇயர், அய்யர் — ஐயர்

இதே போல அகரமும் உகரமும் ஔகாரமாகும்.
எ-டு :
அஉவை, அவ்வை — ஔவை.

இவற்றையும் காண்க :
அய்வனம் – ஐவனம்
வயிரம் – வைரம்
கவுதாரி – கௌதாரி
நாய் – நாஇ
( போலிகளைக் கொள்ளற்க என்கிறார் இளம்பூரணனார்)

உயிர்நெடில்களே பெரும்பாலும் அளவெடுப்பதனால், அவற்றை ‘ உயிரளபெடை’ என்றும், அரிதாக அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளை ‘ ஒற்றளபெடை ‘ எனவும் குறிப்பர்.

ஒற்றளபெடைக்கு எடுத்துக்காட்டு :
“இலங்ங்கு வெண்பிறை சூடீசன் அடியார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண் “

இது ‘ அண்மைச் சுட்டுக்கு உதாரணம் ( சென்ற வாரத்திற்குரியது)
திருஞானசம்பந்தர் திருக்கடைக் காப்பு :

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

Tamil Literature

Quiz 3

1 / 14

1 “கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை; நுண்ணிதின்
உணர்ந்தோர் கண்ட வாறே ” (7)
மாத்திரையாவது யாது?

2 / 14

2 “மெய்யின் அளபே அரையென மொழிப.”
மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை?

3 / 14

3 நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை ?

4 / 14

4 மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை ?  (அரை, ஒன்று இரண்டு)

5 / 14

5 உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை ?

6 / 14

6 உயிர்மெய் நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை ? (அரை,

ஒன்று,இரண்டு)

7 / 14

7 “மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முன் தாம்வரூஉம் ரழலங் கடையே” (30)
(ரழ தவிர்ந்த எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம்வந்து மயங்கும்.) இதற்கு சரியான எடுத்துக்காட்டு )

8 / 14

8 “நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே ” (3-36)
நெட்டெழுத்தின் பின்னாலும், தொடர்மொழி இறுதியிலும் வல்லாறுகளின் மேல் ஏறிவருவது குற்றியலு கரமாம்.
அவை

9 / 14

9 இனவெழுத்து பற்றிய கூற்று.
அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம்.

10 / 14

10 கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை கண்டறிக
‘பந்தயம், பத்து, கற்கண்டு, தென்றல், நன்று’

11 / 14

11 அளபெடை :
“குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே” (41-8)
(இ-ள் : குன்றுவதான ஓசையுடைய அவ்வளபெடை எழுத்தாலான மொழிக்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும் அவை யாதெனில்; நெட்டெழுத்துகளின் பின்னாக இனமொத்த குற்றெழுத்துகள் ஆகும்.)
மேற்சொன்ன நூற்பாவுக்கான மிகச்சரியான மூன்றைத் தெரிவு செய்க?

12 / 14

12 தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் எழுத்துக்கள் உளவோ?

 

13 / 14

13 தன் மாத்திரையிற் குறைவாக ஒலிக்கும் உகரத்துக்குப் பெயர் யாது?

14 / 14

14 பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.

Your score is

The average score is 58%

0%