இலக்கண வகுப்பு – 3
12/11/2025.
தொல்: எழுத்ததிகாரம், இயல் 2, மொழிமரபு.
மொழிமரபு – சுருக்க அறிமுகம்
குற்றியலிகரம்:
இகரம் தன் மாத்திரையிலும் குறுகி ஒலிப்பதே குற்றியலிகர மாகும். குற்றியலுகரத்தை அடுத்து யா வரும்புழி, அவ்வுகரம் இகரமாகும்.
எ-டு: நாகு+ யாது = நாகியாது.
கொக்கு + யாது = கொக்கியாது.
குரங்கு + யாது = குரங்கியாது.
குற்றியலுகரம் :
“நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே ” (3-36)
நெட்டெழுத்தின் பின்னாலும், தொடர்மொழி இறுதியிலும் வல்லாறுகளின் மேல் ஏறிவருவது குற்றியலு கரமாம்.
வல்லாறு – கசடதபற. அவற்றின் மேல் உகரம் ஏற, குசுடுதுபுறு எனக் குற்றியலுகரமாக ஒலிக்கும்.
எ-டு : நாகு ஆசு நாடு தூது திரிபு ஆறு. இங்கே உகரம் குறுகியமை காண்க.
அளபெடை :
“குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே ” (41-8)
இ-ள் : குன்றுவதான ஓசையுடைய அவ்வளபெடை எழுத்தாலான மொழிக்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும் அவை யாதெனில்; நெட்டெழுத்துகளின் பின்னாக இனமொத்த குற்றெழுத்துக்கள் ஆகும்.
எ-டு: ஆஅ. ஈஇ. ஊஉ. ஏஎ. ஓஒ எனவரும்.
அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டி ஒலிப்பதாகும். இங்கு ஆ வுக்கு 2 மாத்திரை, அ வுக்கு ஒரு மாத்திரை, இவ்விரண்டும் கூடி ஒலித்ததால் அதற்கு மூன்று மாத்திரையாம்.
அளபெடை 3 வகை :
1 செய்யுளிசை அளபெடை
2 சொல்லிசை அளபெடை
3 இன்னிசை அளபெடை
செய்யுளிடையே ஓசை குறைந்தவிடத்து, அதனை நிறைவு செய்யப் பயன் படுவது ‘ செய்யுளிசை அளபெடை ‘ ஆம்.
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள்: பெய்யெனப் பெய்யும் மழை ” ( வள்ளுவர்)
ஒரு பெயர்ச் சொல்லை வினையெச்சமாக மாற்றுவது ‘ சொல்லிசை அளபெடை ‘ ஆகும்.
எ-டு : தொகை – தொகைஇ ( தொகுத்து)
வளை – வளைஇ ( வளைத்து)
” உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன் ” ( வள்ளுவன்)
( உரன் — வெற்றி. வரன் – வருகை. நசை – விருப்பம். இங்கு பெயர் வினை யெச்சமானது. )
” செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே “
( சிவஞானபோதம் நூற்பா 12)
கழீஇ – கழுவி. மரீஇ – மருவி இணைந்து.
ஒரு செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும், மேலும் இனிய ஓசை பெறும் பொருட்டு, குறில் எழுத்துகள் நெடில்களாகி அளபெடுத்தல் ‘ இன்னிசை அளபெடை ‘ ஆகும்.
“கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வார் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை” ( வள்ளுவன்)
து –> தூஉ என நெடிலாகி 3 மாத்திரை பெற்றது.
திரு முருகாற்றுப்படையில் நிறைய உண்டு.
(சென்னிப் பொற்ப நகை தாழ்பு துயல்வரூஉம் .. )
ஐகார ஔகார அளபெடை:
“ஐ ஔ என்னும் ஆயீ ரெழுத்திற்கு; இகர உகரம் இசைநிறை வாகும் ” (9-42)
ஐ ஔ என்ற இரண்டெழுத்திற்கும் ஒத்த
குற்றெழுத்துகள் இல்லாத காரணத்தால், இகரமும் உகரமும் வந்து நின்று ஒசை நிறைக்கும்.
எ-டு : ” சேண்விளங்கு இயற்கை வாண்மதி கலைஇ .. ” .. சீரை தைஇய
உடுக்கையர்… ” ( திருமுருகாற்றுப்படை)
ஓரெழுத் தொரு மொழி:
எழுத்துக்கள் சில ஓரெழுத்தாக நின்ற போதிலும், அவை மொழியாகவும் நிற்கும்.
” நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி ” ( 10-43)
எ-டு : ஆ – பசு, ஆன்மா
ஈ – கொடு, ஈ
ஊ.- ஊன்
ஏ – அம்பு
ஐ – தலைவன்
ஓ – மதகு
ஔ – பூமி, நிலம் ( கௌ உம் வரும் )
இவ்வாறு ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தாகவும் அதற்கு மேலும் வருமாயின், அவை
‘ பலவெழுத்தால் இசைக்கும் தொடர்மொழி ‘ எனப்படும் என்கிறார் தொல்காப்பியர். ( 11-45)
எ-டு :
மணி — ஈரெழுத் தொரு மொழி. ( தொடர்மொழி)
அழகு — மூவெழுத்தொரு மொழி. ( தொடர்மொழி)
கதிரொளி — நான்கெழுத் தொருமொழி. ( தொடர் மொழி)
அகத்தியனார் — ஐந்தெழுத்
தொருமொழி ( தொடர் மொழி)
போலி எழுத்துகள் :
” அகர இகரம் ஐகார மாகும் ” ( 21-54)
அகரத்தையும் இகரத்தையும் கூட்டிச் சொல்ல, அது ஐகாரம் போல ஒலிக்கும்.
எ-டு :
அஇயர், அய்யர் — ஐயர்
இதே போல அகரமும் உகரமும் ஔகாரமாகும்.
எ-டு :
அஉவை, அவ்வை — ஔவை.
இவற்றையும் காண்க :
அய்வனம் – ஐவனம்
வயிரம் – வைரம்
கவுதாரி – கௌதாரி
நாய் – நாஇ
( போலிகளைக் கொள்ளற்க என்கிறார் இளம்பூரணனார்)
உயிர்நெடில்களே பெரும்பாலும் அளவெடுப்பதனால், அவற்றை ‘ உயிரளபெடை’ என்றும், அரிதாக அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளை ‘ ஒற்றளபெடை ‘ எனவும் குறிப்பர்.
ஒற்றளபெடைக்கு எடுத்துக்காட்டு :
“இலங்ங்கு வெண்பிறை சூடீசன் அடியார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண் “
இது ‘ அண்மைச் சுட்டுக்கு உதாரணம் ( சென்ற வாரத்திற்குரியது)
திருஞானசம்பந்தர் திருக்கடைக் காப்பு :
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.