Class 4

இலக்கண வகுப்பு – 4 – 19/11/2025
தொல்; எழுத்ததிகாரம்- மொழிமரபு தொடர்ச்சியும் பிறப்பியலும்:
1 மொழி முதலெழுத் துக்கள்:
ஒரு மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள்( உயிர்கள்)
பற்றி உரைக்கிறார்.

” பன்னீ ருயிரும் மொழி முதலாகும் ” (26:59)


இ-ள்: 12 உயிரெழுத்து களும் மொழிக்கு முதலாமாறு இஃது உணர்த்திற்று. இத்தன்மை உயிரின் சிறப்பென்க.
எ-டு: அடை ஆடை இடை ஈயம் உரல் ஊர்தி
எழுத்து ஏணி ஐயம் ஒளி ஓசை ஔவியம்.
** அகரம் முதலாவரும் செய்யுள்கள் ஆயிர மாயிரம். அதிலொன்று இத் திருப்புகழ்:
” அகரமு மாகி அதிபனு மாகி அதிகமு மாகி — அகமாயி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி – அவர் மேலாய்
இகரமு மாகி எவைகளு மாகி இனிமையு மாகி – வருவோனே
இருநில மீதில் எளியனும் வாழ எனது முனோடி – வரவேணும்
Slide 3

தனிமெய் மொழி முதலாகாமை.
” உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா ” (27-60)
உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனி மெய்கள் மொழிக்கு முதலாகா: எனவே உயிர்களும், உயிர்மெய்களும் மொழிக்கு முதலாம் எ-று

மேலும் ங ட ண ர ல ழ ள ற ன என்பன மொழிக்கு முதலாகா மெய்களாம். இவை மெய்களாக, உயிர்மெய்களாக மொழிக்கு முதலாக வரா எனவறிக. இவ்வாறு 94 எழுத்துக்கள் மொழிக்கு முதலாகும் என்பார் நச்சர்.

மொழியிறுதி எழுத்துக்கள் :
” உயிர் ஔஎஞ்சிய இறுதி யாகும் ” (36-69)
உயிர் எழுத்துகளுள் ஔகாரம் ஒழிந்தவை மொழிக்கு ஈறாம்.
எ-டு: உள பலா கிளி தேனீ நடு பூ சேஎ எங்கே மழை நொ மலரோ கௌ
( சேஎ – காளைமாடு)
எகாரம் அளபெடையாக வரும், பெரும்பான்மை மெய்யோடிணைந்து ஈறாகாது.

மொழியீறாம் மெய்கள் :
” ஞண நமன யரலவழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி ” (45-78)

எ-டு:
உரிஞ் மண் வெரிந் திரும் பொன் வேய் வேர் வேல் தெவ் வீழ் வேள் என்பன.
( உரிஞ்- தோல். வெரிந் – மதுகு. திரும் – திரும்பு. தெவ் – பகை. வேள் – தலைவன், அரசன்)
இவற்றில் ‘ தெவ் ‘ வுக்கு:
கந்தபுராணம், தக்ஷ காண்டம், உபதேசப் படலம்,30;
” வானவரென்றும் எம்மை வழுத்தினர்க்கு அருள்வோ மல்லா
ஏனையர் தம்மை தெவ் வென்றெண்ணியே இருத்தும் யாமே “
— மொழிமரபு நிறைவு –

பிறப்பியல் (PHONETICS)- இயல் – 3
6.
” தமிழ் எழுத்துக்க ளெல்லாம் ஒலியை அடிப்படையாகக் கொண்டவை எனக் கூறிய தொல்காப்பியர், அக் கூற்றினை மேலும் வலுவாக்குமாறு ‘ பிறப்பியல்’ என்ற இயலைப் படைத்துள்ளார்.
தமிழ் எழுத்துக்களான உயிர், மெய், உயிர்மெய், சார்பு என்பன எவ்வாறு பிறக்கின்றன என்பதை இவ்வியலில் நாம் காணலாம்.


எழுத்துக்கள் பொதுவாகப் பிறக்கும் முறைமையைத் தலைச்சூத்திரம் விளக்குகிறது.

“உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்பற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே ரியலத்
திறப்படத் தெரியுங் காட்சி யான ” ( 1-83)


சகல விதமான எழுத்துகளின் பிறப்புகளுக்கு இது பொதுவான முறையென அறிக.
இ-ள் : தமிழெழுத்துக்கள் எல்லாம் ஒருவன் முறைப்படவாராய்ந்து சொல்லுங்காலை, கொப்பூழ் அடியாக மேலே கிளர்கின்ற உதானன் என்னும் வாயு தோன்றித் தலை, மிடறு, நெஞ்சு ஆகிய இடங்களில் நிலைத்து நின்று, அவற்றோடு பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் சேர்ந்து எட்டு இடங்களான உறுப்புக்களில் பொருந்தி நின்று, எழுத்துக்களின் பிறப்பாக்கம் வேறுவேறு வகையாகப் பிறக்கும் எ-று

இச் சந்தர்ப்பத்தில் சைவசித்தாந்தம் பக்கமாகச் சற்று நோக்கினால், மேலும் வியப்பாகவிருக்கும். அக்கரங்களின் ஒலிகள் எல்லாம் மனிதனின் மூலாதாரத்தில் பிறந்து, வாய்வழியாக வாக்குகளாக வெளிப்படும் என்று சித்தியார் சொல்கிறது.


(சூக்கும வாக்கது உள்ஓர் சோதியாய் அழிவதின்றி ஆக்கிடும்…43
” வேற்றுமைப் பட்டவன்னம் … மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போன்றாங்கு பைசந்தி நிற்கும்…42
பிறகு மத்யமை வாக்கு, வைகரியாகிச் செவியில் கேட்கும்… 40)

8
பிறப்பியலில் முதலாவதாக உயிரெழுத்துக்கள் பிறக்கும் முறை உணர்த்துகிறார். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவான முறைமையாகும்.

“அவ்வழிப், பன்னீருயிரும் தந்நிலை திரியா, மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்” (2-84)

அவ்வழியே, 12 உயிரெழுத்துகளும் தத்தம் நிலையில் திரியாதாய், மிடற்றின்கண் பிறந்த வளியான் ஒலிக்கும் “

அ ஆ பிறக்குமாற்றை இச் சூத்திரம் உணர்த்துகிறது.

” அவற்றுள், அ ஆ ஆயிரண் டங்காந் தியலும் ” -(3-85)

உயிர் பன்னிரண்டுள் அகர ஆகாரங்களான இரண்டும் அங்காந்து சொல்ல அதனிடமாகப் பிறக்கும்.
10
இங்கு இகரம் முதலியன பிறக்குமாறு சொல்கிறார்.

” இ ஈ எ ஏ ஐயென இசைக்கும் அப்பாலை ந்தும் அவற்றோ ரன்ன:
அவைதாம்: அண்பல் முதல்நா விளிம்புற லுடைய ” (4: 86)


இ ஈ எ ஏ ஐ ஆனவைந்தும் அங்காந்தே பிறக்கும். அவை; பல்லின் அண்மை இடத்தினை நாவின் அடிவிளிம்பு சென்றுறும் எ-று
11

உ ஊ ஒ ஓ ஔ எனவிசைக்கும் அப்பா
லைந்தும் இதழ்குவிந் தியலும் ” (5-87)

12
ஏனையவை சுருக்கமாக;
க் ங் போன்ற சில மெய்கள் நாமுதலும் அண்ண முதலும் உறப் பிறக்கும்.
ச் ஞ் நாவின் இடையும் அண்ணத் திடையும் உறப் பிறக்கும்.
ட் ண் நாவின் நுனியும் அண்ணத்தின் நுனியும் உறப் பிறக்கும்.

— இவ் வகுப்பு நிறைவு –