இலக்கண வகுப்பு – 5 (26/11/2025),
பிறப்பியல் தொடர்ச்சியும் புணரியலும்,
தொல்: எழுத்ததிகாரம்
1 ஈண்டு தகார, நகாரப் பிறப்புகள் பேசப் படுகின்றன.
அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற வொற்றத்
தாமினிது பிறக்குந் தகார நகாரம் (11-93)
இ-ள் :
அண்ணத்தைப் பொருந்திய பல்லினது அடியாகியவிடத்தே, நாவின்நுனி பரந்து, வடிவை உறும்படி ஒற்ற, தகாரமும் நகாரமும் தாம் இனிதாகப் பிறக்கும்.
றன : ( இவையும் அவ்வாறே)
ரழ :
நுனிநா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (13-95)
இ-ள் :
நுனிநா மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும்.
லள:
நாவிளிம்பு வீங்கி யண்பல் முதலுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (14-96)
இ-ள்:
நாவின் விளிம்பு தடித்துப் பல்லின் அணியிடத்தைப் பொருந்த, அந்நாவின் முதலிடத்தே அண்ணத்தை ஒற்ற லகாரமும், அதனைத் தடவ ளகாரமும் பிறக்கும்.
பம:
இதழியைந்து பிறக்கும் பகார மகாரம் (15-97 )
இ-ள்:
கீழிதழும், மேலிதழும் தம்மில் இயையப் பகாரமும் மகாரமும் பிறந்து வரும்.
வ:
பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும் (16-98)
இ-ள்:
மேற்பல்லும் கீழிதழும் தம்மில் இயைய, வகாரம் பிறக்கும்.
ய:
அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும் (17-99)
இ-ள் :
அண்ணத்தை நாச் சேர்ந்தவிடத்து, மிடற்றினின்றும் வளியாலான இசை, அவ்வண்ணத்தை அணைந்து செறிய, யகாரம் பிறக்கும்.
(சார்பெழுத்துகள் தாம் சார்ந்த எழுத்துகள் போலவே பிறக்கும். அவற்றின் பிறப்பு வழியே இவற்றின் பிறப்பு இவற்றின் பிறப்பு வழியாம் எனவுணர்க.
எ-டு :
குற்றியலுகர எழுத்துக்குப் பிறப்பு வழி, உகரம் பிறந்ததற்கான பிறப்பு வழியேயாம்.)
— பிறப்பியல் நிறைவு —
தொல்: எழுத்ததிகாரம், புணரியல் (4 )
புணரியல்: F1B039
இது எழுத்துகளின் புணர்ச்சி பற்றி விளக்குகிறது. இவ் வியலிலிருந்து ஏனைய 5 இயல்களும் புணர்ச்சி பற்றியே விளக்கமளிக் கின்றன. எனவே இவ்வியல் புணர்ச்சி இலக்கணத்திற்கு ஒரு முகவுரை போல அமைந்துள்ளது எனலாம்.
இவ்வியலில் 40 சூத்திரங்கள் காணப் படுகின்றன.
புணர்ச்சி பற்றிய சில முக்கியமான குறிப்புகள்:
• புணர்வது எழுத்துகளேயன்றிச் சொற்களல்ல.
• புணர்ச்சி நிகழ்வதற்கு இரண்டு மொழி/சொற்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும்.
• முன்னால் வந்த சொல் நிறுத்தச்சொல் என்றும்,
அதனோடு புணர வரும் சொல் குறித்துவரு கிளவி என்றம் தொல்காப்பியர் குறித்துள்ளார்.
இவை பின்வந்த இலக்கணகாரர்களால்
நிலைமொழி, வருமொழி என அழைக்கப்படுகின்றன.
• உண்மையிலேயே இறுதி எழுத்தும், முதலெழுத்துமே புணர்கின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
• ஈறுகள் மெய்யீறு/உயிரீறு எனவும், முதலெழுத்து உயிர்முதல்/உயிர்மெய்முதல் எனவும் பெயர் கொள்ளும்.
முதற் சூத்திரத்தில் புணர்சிக்கு நின்ற மொழிகளின் முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகளின் எண்ணிக்கையைக் கூறுகிறார்.
மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின்
இரண்டுதலை யிட்ட முதலா கிருப ஃது
அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே யுயிரென்று ஆயீரியல (1-104)
இச் சூத்திரத்தின் பொருட் சாராம்சம் :
புணர வரும் மொழிமுதல் எழுத்துகள் 22 என்றும், நிலைமொழியின் இறுதி எழுத்துகள் 24 என்றும், இவை 33 எழுத்துகளினுள்ளே அடக்கம் என்றும் சொல்கிறார் எனத் தெளிக.
இங்கு 22 தொகை எனவும், அதன் விரி
12 உயிர்,
9 உயிர்மெய்,
1 மொழிமுதற் குற்றியலுகரமும் ஆகும்,
(ஒரு மொழிமுதற் குற்றியலுகரமும் ஆகும்.)
24 தொகை,
இதன் விரி
12 உயிர்,
11 மெய்,
1 ஈற்றுக் குற்றியலுகரமும் ஆகுமாம்.
இவ்வாறு வரும் எழுத்துகள் ஈறாகவும், முதலாகவும் கூடிப் புணரும் எனவறிந்து கொள்க!
33?
இத்துடன் வகுப்பு 5 நிறைவு, ஐயம் தெளிதல்