இலக்கண வகுப்பு – 26
தொல்: சொல்: வினையியல் – 6 ( தொடர்ச்சி)
சென்ற வகுப்பில் உயர்திணைப் படர்க்கை கற்றோம். இனி அஃறிணைப் பன்மை, படர்க்கையில் வருமாறு காண்போம்.
1
” அஆ வ என வரூஉம் இறுதி, அப்பான் மூன்றே
பலவற்றுப் படர்க்கை ” ( 216)
இ-ள்:
அகரமும் ஆகாரமும் வகர உயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்றும் அஃறிணைப் பன்மைப் படர்க்கையாம் எ-று
எ-டு:
தொக்கன, தொக்க, உண்டன, உண்ட, வந்தன,
வந்த, சென்றன, சென்ற போன்றன அஃறிணை வினைகளாகவும், அகரவீறு கொண்டு, படர்க்கைப் பன்மையாகவும் வந்தன காண்க.
கோயில் திருவகவலில் பட்டினத்தார் பாடலைக் கவனியுங்கள்:
“பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும்மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் “
ஆவீறு —
உண்ணாநின்றன
பேசாநின்றன
வவீறு —
சேர்ந்து வருவ, கண்டு வருவ, விரைந்து செல்வ.
2
இனி ஒருமை வினை முற்று எவ்வாறு அமையும்?
” ஒன்றன் படர்க்கை தறட
ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும் ” ( 217)
இ-ள்:
ஒன்றனை உணர்த்தும் படர்க்கை வினையாவது தறட என்பனவற்றை ஊர்ந்து நின்ற குற்றியலுகரத்தை ஈறாகவுடைய சொல்லாம் எ-று
த – து ற- று ட- டு — இவை குற்றியலுகர இறுதிகள்.
எ-டு:
ஆமை புக்கது. சேவல் கூவிற்று. விறகுக்குண்டு
கட்டு.
தகரவுகரம் மூன்று காலத்தும், றகரவுகரம் இறந்த காலத்தும், டகரவுகரம் மூன்று காலத்திற்குமுரியன.
3
இனி ‘ வினையெஞ்சு கிளவி’ ஈண்டு உரைக்கிறார்.
” செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செயியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி ” (228)
இ-ள்:
இங்கு குறிப்பிடப்பட்டன வினையெச்சப் பாகுபாடுகள் அல்லது வாய்பாடுகள் என உரையாசிரியர் குறிப்பர்.
அவை:
நக்கு உண்டு வந்து சென்று எனவும், எஞ்சி ஓடி எனவும், ஆய் போய் எனவும் வரும்.
எ-டு:
நக்குச் சுவைத்தான்.
உண்டு களித்தான்
வந்து அடைந்தான்
சென்று சேர்ந்தான்
இவ் வொன்பதில் உரிஞ் என்றதுமடங்கும். மேலும் சினைஇ, உரைஇ, இரீஇ, உடீஇ, பராஅய், தூஉய், தாஅய் போன்ற அளபெடைகளும், ஆகி, போகி, மலர்த்தி, ஆற்றி என்ற குற்றுகரவீறாய் வருவனவும் வினையெஞ்சு கிளவிகளாம்.
இவ்வெஞ்சு கிளவிகளைக் கொண்டே மாணிக்கவாசக சுவாமிகள் பாடுகிறார்:
” வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி
யானெனது என்றவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி
வாழ்த்துவனே ” (திருவாசகம்)
4
இனி ‘ பெயரெஞ்சு கிளவி’ பற்றிக் கூறுகிறார்.
” நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கு மோரன்ன உரிமைய
செய்யும் செய்த என்னுஞ் சொல்லே ” ( 234)
இ-ள்:
செய்யும், செய்த எனும் சொற்கள், தொழில் முதனிலை எட்டனுள் ‘ இன்னதற்கு இது பயனாக’ என்னும் இரண்டு ஒழித்து, ஏனை ஆறு பொருட்கும் ஒத்த உரிமைய எ-று
எ-டு:
வாழும் இல், கற்கும் நூல், துயிலும் காலம், வளையும் கோல், ஓதும் பார்ப்பான், உண்ணுமூண்
என ஆறும் வந்தன. இவை ‘ செய்யும் ‘ எனும் வாய்பாடு கொண்ட பெயரெஞ்சு கிளவிகள். இவை வினைத் தொகைகள் எனவுமறிக.
புகுந்த வீடு, உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போன போக்கன் என ஆறும் ‘ செய்த ‘ எனும் வாய்பாடு கொண்ட பெயரெச்சங்களாம்.
இவ்வாறே ‘ உம்’ எனும் ஈறு பெற்று, செய்யும் எனும் வாய்பாட்டில் எதிர்காலம் குறித்து வரும்.
எ-டு:
நாளை வரும் விடியல்
5
இனி ‘ காலம் மயங்கு பொருள் ‘ பற்றி உரைக்கிறார்.
” இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்கு மொழிக் கிளவி ” (247)
இ-ள்:
இறப்பும் எதிர்வுமாகிய இரண்டு காலமும் மயங்கு
மொழிப் பொருளாக வரும் எ-று
எ-டு:
” இவர் பண்டு இப் பொழிலகத்து வந்து விளையாடுவர். நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான் பின் ( எனின்), நீ என் செய்குவை ” என்பது ஓர் பண்டைய இலக்கிய உரையாடல்.
இங்கு, இறப்பும் எதிர்வும் மயங்கி வந்தமை காண்க.
இது ‘ மயங்குமொழிக் கிளவி ‘ என்கிறார் தொல்காப்பியர்.
இதனைக் ‘ கால வழுவமைதி ‘ எனக் கொள்ளல் உசிதமாகும்.
— இவ் வகுப்பு ( வினையியல்) நிறைவு —