இலக்கண வகுப்பு – 25
தொல்:சொல்: வினையியல், இயல் – 6, 13-05-2026
பெயரை விளக்கி வந்த தொல்காப்பியர், இப்போது ‘வினை’ பற்றி விளக்கத் தொடங்குகிறார். இவ் வினையியலில், வினைச் சொற்களின் இலக்கணம், காலம், திணை, பால், தோற்றம் என்பன விளக்கப்படுகின்றன.
இவ் வினையியலில் மேலும் விரிவாக இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், குறிப்பு வினை, உயர்திணை அஃறிணைக்கான வினைச் சொற்கள், வினையெச்சங்கள் குறித்துப் பேசப் படுகின்றன. இதில் 51 நூற்பாக்களுள.
1
தலைச் சூத்திரத்தே வினைச் சொல்லின் பொதுவியல்பு என்ன வென்றும், வினை இன்னது என்றும் விளக்கப்படுகிறது.
” வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் “
(1-198)
இ-ள்:
வினையென்று சொல்லப்
படுவது வேற்றுமையோடு பொருந்த மாட்டா. ஆராயுங் காலை, காலத்தொடு புலப்படும் எ-று
இங்கு ‘வேற்றுமை’ என்றது உருபுகளைச் சுட்டின.
எ-டு:
‘ வெள்ளையன் உண்டான் என வேற்றுமை கொள்ளாது காலத்தொடு வந்தமை காண்க. இதனையே மூன்று காலத்திற்கும் காண்க;
” வெள்ளையன் உண்கிறான் ‘ – நிகழ்காலம்.
‘ வெள்ளையன் உண்பான் ‘ — எதிர்காலம்.
3
இப்போது அம் மூன்று காலங்களும் எவை எனக் காட்டுகிறார்.
” இறப்பி னிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்றலாறே ” ( 3-200)
இ-ள்:
இறப்பும், நிகழ்வும், எதிர்வும் என்று சொல்லப்படும் அம் மூன்று காலமும் குறிப்பு வினையொடும் பொருந்தும் மெய்ந்நிலைமையை உடைய, வினைச் சொல்லானவை தோன்று நெறிக்கண் எ-று
எனவே காலங்கள் வெளிப்படத் தோன்றுவன மூன்று என்பதும், வெளிப்படத் தோன்றாதது ஒன்று என்ற குறிப்புவினை என்பதும்
பெறப்பட்டன.
எ-டு:
உண்டான் — இறப்பு
உண்கிறான் — நிகழ்வு
உண்ணாநின்றான் – நிகழ்வு.
உண்பான் — எதிர்வு
( நிகழ்கால இடை நிலைகள் : ஆநின்று, கின்று, கிறு.)
( இறந்தகால இடைநிலைகள் : த் ட் ற் ன்)
( எதிர்கால இடைநிலைகள் :
ப் வ்)
வெள்ளையன், கரியன் போன்றன குறிப்பு வினைகளாம். இவை காலமொடு தோன்றின்
பண்டு வெள்ளையன்,
இன்று கரியன், நாளை கரியன் என வரும்
முக்காலங்களின் வரைவிலக்கணம் :
இறப்பு – தொழிலொன்றின் கழிவு, சென்று முடிதல்
நிகழ்வு – தொழிலொன்று தொடங்கி அது முற்றுப் பெறாது நடந்து கொண்டிருக்கும் நிலை
எதிர்வு – தொழிலொன்று புதிதாகப் பிறவாத நிலை,
இங்கு தொழில் என்றது வினை, செயல், இயங்கு
தன்மை எனப் பொருளாம்.
4
இனி, வினைச் சொற்களின் வகைகள்.
” குறிப்பினும் வினையிலும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக் குரிமையும்
அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோர் அன்ன உரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே ” ( 4-201)
இ-ள்:
குறிப்புப் பொருண்மைக் கண்ணும், தொழிற் பொருண்மைக்கண்ணும் தோன்றி, காலத்தொடு வரும் எல்லா வினைச் சொல்லும், உயர்திணைக்கு உரியன, அஃறிணைக்கு உரியன, இரு திணைக்கும் ஒப்ப உரியன என்று தோன்றும் நெறிக்கண் மூன்று கூற்றனவாம் எ-று
இங்கு மூவினைகளையுமே ‘ மூன்று கூற்றன ‘ என்றார்.
- உயர்திணைக்குரியது —
முருகன் வந்தான். இது தெரிநிலை வினை
முருகன், வள்ளி — இவை குறிப்பு வினை
2
அஃறிணைக்குரியது —
மாமரம் பூத்தது. இது தெரிநிலை வினை
மாமரம் – குறிப்பு வினை
3
இருதிணைக்குமுரியது —
வந்தனை, தந்தனை. இவை தெரிநிலை விரவுவினை ( முக்கால விரவு வினை)
எ-டு:
கண்ணன் கனவில் வந்தனை. இது உயர்திணை
இலக்குமி செல்வம் தந்தனை. இது உயர்திணை. இவை முக்கால விரவுவினை.
5
மேலும், படர்க்கை இடத்திலே ஒருமை வினைமுற்று வருமாறும், நான்கு ஈறுகள் முக்காலத்திற்கும் வருமாறும் உரைக்கிறார்.
” அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே ” (8-205)
இ-ள்:
அன் ஆன் அள் ஆள் எனும் ஈற்றையுடைய நான்கு சொல்லும், உயர்திணை ஒருமை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் எ-று.
இந் நான்கீறும் மூன்று காலமும் பற்றி வரும்.
எ-டு:
நாதன் உணவு உண்டனன்
( இறப்பு ) அன் வந்தது.
நாதன் உணவு உண்கிறான் ( நிகழ்வு) ஆன் வந்தது
நாதன் உணவு உண்பான்
( எதிர்வு) ஆன் வந்தது
செல்வி உணவு உண்டனள்
செல்வி உணவு உண்கிறாள்
செல்வி உணவு உண்பாள்
( இவை இன்றைய வழக்கு. ஆயின்
உண்டனன், உண்ணாநின்றனன்,
உண்பன் என அன் முக்காலமும் வந்தமை முந்தைய வழக்கு எனத் தெளிக)
6
இதேபோல படர்க்கைப் பன்மை வினைமுற்றுக்கு
அர், ஆர் ப என்ற மூவீறும் நின்று முக்காலமும் பொருள் தரும்.
உண்டனர்
உண்ணாநின்றனர்
உண்பர்
உண்டார்
உண்ணாநின்றார்
உண்பார்.
- இவ்வகுப்பு நிறைவு –
ஐயம் தெளிதல்
ஐயா,
இப் பகுதியை ‘ஐயம் தெளிதல் ‘ பகுதியில் போட முடியுமா?
நூற்பா 162 – உயர் திணைப் பெயர்கள் 15.
நூற்பா 167 – அஃறிணைப் பெயர்கள் 15.
நூற்பா 168 – அஃறிணைப்
பாலுணர்த்தும் பெயர் 9.
நூற்பா 175 – விரவுப் பெயர்களின் விரி பற்றிக்
கூறுகிறது:
” அவற்றுள்,
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி
இரண்டா கும்மே ஏனைப்
பெயரே தத்தம் மரபின “
இதன்படி 4+4+4+2 = 14
ஏனைப் பெயர்கள் தத்தமக்கான இலக்கண மரபுடையன என்றார்.
வகுப்பு 25 நிறைவு