https://www.tholkappiyam.org
இலக்கண வகுப்பு – 24
தொல்:சொல்; ‘ பெயரியல்’ தொடர்ச்சி:
சென்ற வகுப்பில் ‘ பால் விளங்க நின்ற உயர்திணைப் பெயர்கள் 15 என்று பார்த்தோம். அடுத்து இருதிணைப் பெயர்களில் ‘ அஃறிணைப் பெயர்கள் ‘ பற்றி நோக்குவோம். அவையும் 15 என்றே தொல்காப்பியர் வகுத்துள்ளார்.
1
” அது இது உதுவென வரூஉம் பெயரும்
அவை முதலாகிய ஆஃதப் பெயரும்
அவையிவை உவையென வரூஉம் பெயரும்
அவை முதலாகிய வகரப் பெயரும்
யாது யா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த அஃறிணைப் பெயரே ” ( 167-13)
இ-ள்:
அது இது உது; அஃது இஃது உஃது ; அவை இவை உவை; அவ் இவ் உவ் என்ற வகரமும், யாது யா யாவை என்ற வினாப்
பெயரும் ஆக பதினைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயராம் எ-று
“அவன் அவள் அது வெனும் அவை மூவினை மையில் தோற்றிய திதியே ஒடுங்கி மனத்துளதாம்
அந்தமாதி என்மனார் புலவர்”
( சிவஞானபோதம், 1 மெய்கண்டதேவர்)
2
அப் பதினைந்தோடு மேலும் பலவுள என்கிறார்.
“பல்ல பலசில என்னும் பெயரும்
உள்ள வில்ல என்னும் பெயரும்
வினைப் பெயர்க் கிளவியும்
பண்பு கொள் பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
ஒப்பி னாகிய பெயர் நிலை உளப்பட
அப்பா லொன்பதும் அவற்றோ ரன்ன ” ( 168-14)
இ-ள்:
இங்கு கூறப்பட்ட 9 பெயர்களும் அஃறிணைப் பாலுணர நிற்கும் எ-று
பல்ல பல சில உள்ள இல்ல = 5
வருவது செல்வது போன்ற வினைப் பெயர்க
ளும்,
கரியது செய்யது போன்ற பண்புகொள் பெயர்களும்,
ஒன்று பத்து நூறு என்ற எண்பற்றி குறிக்கும் பெயர்களும்,
பொன்னன்னது பொன்னல்லவை எனவரும் ஒப்புப் பெயர்களும்,
ஆக ஒன்பதும் அஃறிணைப் பாலனவாம்.
3
இவ்வண்ணம் சொல்லப்பட்ட அஃறிணைச் சொற்கள் ‘ இயற்பெயர் ‘ ஆகும் என்றும்,
‘கள் ‘ எனுமீறு விகுதியாகும் காலை ஏற்படும் மாற்றம் பற்றியும் இங்குரைக்கிறார்.
” கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய பலவறி சொற்கே ” ( 169-15)
இ-ள்:
கள்ளென்னும் ஈற்றொடு பொருந்தும் அஃறிணை இயற் பெயர், கள் ஈற்றொடு பொருந்து மிடத்து ‘ பலவறி சொல்லாம்’ எ-று
எ-டு:
ஆ நாய் குதிரை கழுதை தெங்கு பலா மலை கடல் என்பன அஃறிணை இயற்
பெயர்களாம். ஒருமைக்கும் பன்மைக்கும் இயல்பாய் நிற்றலால் ‘ இயற்பெயர்’ என்றானது.
இவை ஒவ்வொன்றின் ஈற்றிலும் ‘ கள் ‘ என்ற விகுதி சேர்க்க, அவை பலவறி ( பன்மை) சொல்லாம் எனத் தெளிக!
ஆயினும் ஒரு புறநடையாக அஃறிணைக்கு வேறான ஒரு பிரமாணம் சொல்லப்
பட்டுள்ளது.
” தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே ” ( 171-17)
இ-ள்:
கள்ளொடு சிவணாத அஃறிணை இயற்பெயர், ஒருமையும் பன்மையும் அதற்கேற்ற வினையால் அறியப்படும் எ-று
எ-டு:
ஆ வந்தது — ஒருமை
ஆ வந்தன — பன்மை
காளை வந்தது — ஒருமை
காளை வந்தன — பன்மை
மணிவாசகர் ” கூவின பூங்குயில் கூவின கோழி..
இயம்பின சங்கம் ஓவின தாரை ” என்றமையை ஒப்பிட்டு நோக்குக.
4
அடுத்து, இரு திணைக்கும் சென்று விரவிப் பொருள் தருவன
‘ விரவுப் பெயர்கள் ‘ என்று முன்னர் கற்றோம். ஏனைய விரவுப் பெயர்களை இங்கு குறிக்கிறார்.
” இயற்பெயர் சினைப் பெயர் சினைமுதற் பெயரே
முறைப் பெயர்க் கிளவி
தாமே தானே எல்லா நீயிர்
நீயெனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவுமா அங்கு
அன்னவை தோன்றின்
அவற்றொடுங் கொளலே “
( 174-20)
இ-ள்:
இயற்பெயர் முதலாக நீ என்பதீறாகச் சொல்லப்பட்டன அல்லாத அன்ன பிறவும் ஆண்டு வருமாயின் சொல்லப் பட்டவற்றோடு கூட்டிக் கொள்க எ-று
எ-டு:
இயற்பெயர் — கந்தன், காந்தன், சிவந்தி, பார்வதி
சினைப்பெயர்– நெடுங்கண்ணன், நீள்விழியாள்
சினைமுதற் பெயர் — சீழ்த்தலைச் சாத்தனார், வாள்விழி வள்ளி
முறைப்பெயர் — தாய், தந்தை, அண்ணா, அக்கா
தம்மையுணர்த்தும் பெயர்– தாம், தான், எல்லா, நீயிர், நீ
இயற்பெயரானது இரண்டு வகையாய்ப் பொருள் தரும்.
1 இடுகுறிப்பெயர் — மரம், நிலம், வளி போன்றன
2 காரணப்பெயர் — வேலவன், ஓசைகொடுத்த நாயகி, பிறைசூடி.
5 தொல்காப்பியர் குறித்த இயற்பெயர்களின் தொகை 16 என விரிவு செய்யப்பட்டுள்ளது:
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் ஒருமை இயற் பெயர் பன்மை இயற்பெயர் —4
பெண்மைச் சினைப் பெயர், ஆண்மைச் சினைப்பெயர், பன்மைச் சினைப்பெயர், ஒருமைச் சினைப்பெயர் — 4
பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர், ஆண்மை சுட்டிய சினை
முதற்பெயர், பன்மை சுட்டிய சினைமுதற்பெயர், ஒருமை சுட்டிய சினை முதற் பெயர் — 4
பெண்மை முறைப்பெயர், ஆண்மை முறைப்பெயர் — 2
ஆக இயற்பெயரின் விரிவு 14 எனவுணர்க.
- இவ்வகுப்பு நிறைவு —