இலக்கண வகுப்பு – 23, 29-4-2026
தொல்:சொல்: இயல் – 5 ‘ பெயரியல் ‘
பெயர், வினை, இடை, உரி ஆகிய நால்வகைச் சொற்களையும் பொதுவகையானும், பொது இலக்கணமாதல் ஒப்புவமையானும், வேற்றுமைப் பெயரோடு இயைபுடைமையானும், பெயரிலக்கணத்திற்கும் பொதுவிலக்கணத்திற்கும், இடை வேற்றுமை இலக்கணமுணர்த்தி, இனிச் சிறப்பு வகையான் நான்கு சொல்லும் உணர்த்துவான் எடுத்துக் கொண்டு, இவ்வோத்தான் அவற்றின் முதற் கண்ணதாகிய ‘ பெயரிலக்கணம் ‘ உணர்த்துகிறார். அதனான் இது ‘ பெயரியல்’ என்னும் பெயர்த்தாயிற்று.
1
” எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ” ( 1-155)
இ-ள்:
பெயர், வினை, இடை, உரி ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் குறித்து வருவனவே, பொருள் குறியாது நில்லா எ-று
தமிழ்ச் சொல் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால், அதனுள்ளே ஒரு பொருளுமிருக்கும். இவ்விலக்கணப் படி, சொல்லும், அது எடுத்துக் கொண்ட பொருளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் இணைந்தே காணப்படும். இவ்விலக்கண உண்மையை அபிராமிப் பட்டர் பதிவு செய்கிறார்.
” சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே ….”
இதனை ஒத்தபடிக்கு, கவி காளிதாசனும் தனது இரகு
வம்சத்திலே பாடியுள்ளார்:
” வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப்
ப்ரதிபத்தயே//
ஜகத ஃபிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ “
( இ-ள்: சொல்லும் பொருளுமென இணைந்த இத் தொல்லுலகின் தாய் தந்தையரான பார்வதி பரமேஸ்வரரை; சொல்லையும் பொருளையும் அறிந்திட வேண்டிப் பிரார்த்திக்கிறேன்)
2
பொருளை உணர்த்துவதே சொல் என்றவர், அச் சொல் இரண்டு வகையாக இயங்கும் என்கிறார்,
” பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர் ” ( 156)
இ-ள்:
தன்னின் வேறான பொருளை அறியப்படுத்துதலும், பொருளறியப்படாமல் அச் சொல் தானே அறியப்படுதலும் ஆகிய இரண்டும் சொல்லே எ-று
எ-டு:
அவன் வந்தான், அவள் வந்தாள் போன்றன தன்னின் வேறான பொருளை உணர்த்தின.
அல்லாமல் ‘ அவன் ‘ என்ற சொல் தன்னையே அறியப்படுத்தும் சொல்லாக வரும், இப்படி,
அவன் – பெயர்ச்சுட்டு, படர்க்கை, ஆண்பால், உயர்திணை,
வந்தான் – ஆண்பால், இறந்த காலம், வினை முற்று.
ஆக ஒரு சொல்லானது தானும், பிறிதுமென இரண்டு வகையாமெனத் தெளிக!
3
இனி, சொற்களின் பாகுபாடு பற்றி இங்கு உணர்த்துகிறார்.
” சொல்லெனப் படுவ பெயரே வினையென் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே ” ( 158)
இ-ள்:
சொல்லாவன பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லுமென இரண்டென்று சொல்வர் அறிந்தோர் எ-று
4
அடுத்து, மேலும் இருவகைச் சொற்களைக் குறித்து இந்நூற்பா உரைக்கிறது.
” இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்று மென்ப ” ( 159)
இ-ள்:
இடைச் சொல்லும், உரிச் சொல்லும் பெயரையும், வினையையும் சார்ந்து தோன்றும் எ – று
5
இனி, பெயர்ச் சொல்லின் இலக்கணம் யாது என இங்கு விளக்குகிறார்.
” அவற்றுள்; பெயரெனப் படுபவை தெரியுங் காலை, உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்குமோர் அன்ன. உரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே “
( 160)
இ-ள்:
மேலேயுரைத்த நான்கினுள், பெயரென்று சொல்லப்படுவன உயர்திணைக்கு உரியனவாய் வருவனவும், அஃறிணைக்கு உரியனவாய் வருவனவும், இரண்டு திணைக்கும் ஒத்த உரிமையாய் வருவனவும் என மூன்று வேறுபட்டனவாம் எ-று
எ-டு:
மன்னன் – உயர்திணைப் பெயர்.
யானை – அஃறிணைப் பெயர்.
தாய் – இருதிணைக்கும் உரித்தாகி வந்த விரவுப் பெயர்.
6
அடுத்து இரு திணைகளாகப் பிரிந்த ஐம்பால்களையும் பெயர்ச் சொல் உணர்த்தும் என்றும், அவை வழக்கில் எவ்வாறு வரும் என்றும் தெளிவுறுத்துகிறார்.
” இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் உரியவை யுரிய பெயர்வயி னான ” (161)
இ-ள்:
இரண்டு திணைகளாய்ப் பிரிந்த ஐம்பால், கிளவியாதற்கும் பெயருள் உரியன உரியவாம் எ-று
அவன் — உயர்திணை, ஆண்பால்
அவள் — உயர்திணை, பெண்பால்
அவர் — உயர்திணை, பலர்பால்
அது — அஃறிணை, ஒன்றன் பால்
அவை — அஃறிணை, பலவின் பால்
ஆண் என்றதை ஆடூஉ என்றும், பெண் என்றதை மகடூஉ என்றும் தொல்காப்பியர் குறிப்பர்.
மேலும், னகரவீறு ஆண்பாற்கும், ளகரவீறு பெண்பாற்கும் உரியனவாம்.
எ-டு:
நஞ்சுண்டவன் சாவான்,
நஞ்சுண்டவள் சாவாள்,
நஞ்சுண்டது சாகும்,
நஞ்சுண்டார்/வர் சாவார்/சாவர்,
நஞ்சுண்டன சாம்
என்று உரியவாறு வந்தமை காண்க!
7
மேலும் பால்விளங்க நிற்கும் உயர்திணைப் பெயர்கள் பதினைந்து வகைத்தன என்று எண்ணிக்கை உரைக்கிறார்.
” அவ்வழி, அவ னிவ னுவனென வரூஉம் பெயரும்
அவ ளிவ ளுவளென வரூஉம் பெயரும்
அவ ரிவ ருவரென வரூஉம் பெயரும்
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவர் என்னும் ஆவயின் மூன்றொடு
அப் பதினைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே ” ( 162)
இ-ள்:
மூவகைப்பட்ட பெயருள், அவன் என்பது முதலாக, யாவர் என்றதீறாகச் சொல்லப்பட்ட பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்திணைப் பெயர்களாம் எ -று
( மூன்று பெயர் = ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர், விரவுப்பெயர் என்பன)
- இவ்வகுப்பு நிறைவு –