Class 22

இலக்கண வகுப்பு – 22
தொல்: சொல்: இயல் – 4

‘விளிமரபு ‘

‘ விளி ‘ என்றது விளித்தலைக் குறிக்கும். விளித்தல் அழைத்தல் எனப் பொருள் கோடலாம். ‘மரபு’ என்றது தமிழ் கூறும் நல்லுலகில் ஆதிமுதல் நிலவி வந்த பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் குறித்து நின்றது.

இதுவரை 7 வேற்றுமைகளையும், அவை கொண்ட உருபுகளையும் விளக்கி வந்த தொல்காப்பியர், வேற்றுயியலிலும், வேற்றுமை மயங்கியலிலும் கூறாது விட்ட எட்டாம் வேற்றுமை இங்கு தனியே ஒரு இயலிலே விளக்குகிறார். இதில் 37 நூற்பாக்கள் மட்டுமே உள.//

1
எட்டாம் வேற்றுமைக்கும், முதலாம் வேற்றுமை போல, உருபு கிடையாது.
இவ் விளி வேற்றுமை இரண்டு வகை :

அண்மை விளி, சேய்மை விளி.

” விளியெனப் படுவ கொள்ளும் பெயரொடு
தெளியத் தொன்றும் இயற்கைய வென்ப ” ( 118)

இ-ள்:

விளியென்று சொல்லப்படுவன, தம்மை
ஏற்கும் பெயரோடு விளங்கத் தோன்றும் இயல்புடையவென்று சொல்வர் ஆசிரியர் எ-று //

விளி வேற்றுமை பெயராலே விளங்கும். ஈறு திரிதலும், ஈற்றயல் நீடலும், பிறிது வந்தடைதலும் இயல்பாம் என்றார். வெற்றே விளிக்காமல், குறித்து விளிப்பதே விளி என்றறிக.

” கொள்ளும் பெயர் ” என்று குறித்ததனால், ‘ கொள்ளாப் பெயரும்’ உண்டென்று கொள்க.

2
இங்கு உயர்திணைப் பெயர்கள் விளியேற்கும் உயிரீறுகள் எவை எனக் குறிக்கிறார்.

” அவைதாம்;
இ உ ஐ ஓ வென்னுமிறுதி
அப்பால் நான்கே உயர்திணை மருங்கின்
மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே “
(120)

இ-ள்:

பெயர் தாம் இ உ ஐ ஓ எனும் இறுதியை உடைய நான்கு பெயரும் உயர்திணைப் பெயருள் விளி கொள்ளும் பெயர் எ-று//

“அவற்றுள் இ ஈயாகும், ஐ ஆய் ஆகும் ” என்பது சூத்திரம் 121 உரைப்பதாம்.

எ-டு:

நம்பி – நம்பீ ( இங்கு இ ஈயானது)

நங்கை – நங்காய் ( இங்கு ஐ ஆய் ஆனது)

மேலும் ஈறு திரிந்தமையும், ஈற்றயல் நீண்டமையும், பிறிது வந்ததும் கண்டு கொள்க.

மேலும்
” ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் ” ( 122)

இ-ள்:

ஓ என்ற உயிரும், உ என்ற உயிரும் விளிக்கும் போது
ஏகாரத்துடன் இணையும் எ-று //

எ-டு:

கோ – கோவே ( இங்கு ஓ ஏயுடன் சிவணியது)

வேந்து – வேந்தே ( இங்கு உ ஏயுடன் சிவணியது)

” …..ஏவல்கொளு மிந்த்ர லோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே!”

( வடிவோனே – ஓ ஈறு ஏயொடு சிவணியது)

” …..பேதை பயில் கின்ற ஆறிரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே “

( வாழ்வே – உ ஈறு ஏயொடு சிவணியது)

மேலும் உகரவீறு ஏயொடு சிவணுகின்ற விளி வேற்றுமையை திருவிசைப்பாவிலே (திருமாளிகைத்தேவரருளியது) காணலாம் :

” ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ……” //

3
இவ் விளி வேற்றுமை அளபெடை கொள்ளும் போது எவ்வாறியலும்?

” அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகும் செயற்கைய வென்ப ” (125)

இ-ள்:

அளபெடை தன்னியல்பு மாத்திரையின் மிகுந்து, நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் இகரவீற்றுப் பெயர், இ ஈ ஆகாது இயல்பாய் விளி ஏற்கும் செய்கையை உடையவாம் எ-று

எ-டு:
தோழீஇ — தோழீஇஇ, தோழீஇஇஇ. //

4
இவ்வாறு வருகின்ற விளிகள் ‘ சேய்மை விளி’ கள் ஆகும். ஆயின் அண்மை விளி இயல்பாக நின்றிலங்கும்.

” அண்மைச் சொல்லே இயற்கை யாகும் ” ( 127)

எ-டு:

நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி.
(இங்கு இ உ ஐ ஓ நான்கும் இயல்பாய் வந்தமை காண்க. //

5
மேலும் சில விளிமரபுகளைச் சுருக்கி நோக்குவோம் :

அன்னை – அன்னா
அத்தை – அத்தா
அன் ஈறு ஆவாகும் ( சோழன் – சோழா)

அன் ஈறு அண்மை விளியில் அகரமாகும்.
(தலைவன் – தலைவ, இறைவன் – இறைவ) //

முறைப் பெயர் ஏகார விளியேற்கும்.
( மகன் – மகனே, மகள் -மகளே)

தான், யான், யாவன், சுட்டு முதல்கள் என்பன விளியேலாப் பெயர்கள்.

அர், ஆர் என்ற இரண்டும் ஈர் என்ற விளியேற்கும்.
( பார் – பாரீர், கூத்தர் – கூத்தீர், நல்லர் – நல்லீர்)

புள்ளியீறும், உயிரீறுமாகிய அஃறிணைப் பெயரெல்லாம் விளி கொள்ளும் வேளை, ஏகாரம் பெறும்.
( மரம் – மரமே, அணில் – அணிலே, நரி – நரியே)

— விளிமரபு நிறைவு —