இலக்கண வகுப்பு – 21
தொல்:சொல்: வேற்றுமை மயங்கியல் – தொடர்ச்சி
சென்ற வகுப்பில் ஐ, ஆன், இன் போன்ற சில வேற்றுமை உருபுகள் எவ்வாறு மயங்கின என்று ஓரளவு கற்றுக் கொண்டோம், இவ் வகுப்பில் மேலும் சில மயக்கங்களைப் பார்ப்போம்.
1
உடைமைப் பொருளில் வரும் ‘ அது ‘ என்ற ஆறாமுருபு, ‘கு’ வாகி வந்து மயங்குந் தன்மையை இந் நூற்பா விளக்குகிறது.
” அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகை வயின், அதுவென் உருபு கெடக் குகரம் வருமே “( 94)
இ-ள்:
ஆறாம் வேற்றுமைப் பொருள்மேல் வரும் உயர்திணைத் தொகைக்
கண் உருபு விரிப்புழி, ‘அது’ வெனும் உருபு கெட, அதன் பொருட்கண் நான்காமுருபு வரும் எ-று
எ-டு:
‘நம்பி மகள் வள்ளி’, இது உடைமைப் பொருளாதலின், அத் தொகையை விரிக்க ‘ நம்பியது மகள் ‘ எனவரும். அதனை ‘அது’ உருபுகெட ‘ நம்பிக்கு மகள் வள்ளி ‘ என விரியும். ஏனெனில் ‘அது’ அஃறிணைப் பால் வருமென்பதால், உயர்திணைக்கண் ‘கு’ உருபேற்கும் என்றதனாலாகும்.
அஃறிணைக்கண்,
பசுக்கன்று — பசுவினது கன்று.
கிளிக்குஞ்சு — கிளியினது குஞ்சு என வந்தமை அஃறிணை உடைமைப் பொருளை உணர்த்திற்று.
2
பல உருபுகள் தொடர்ந்து அடுக்கி வந்தும் மயங்கும் என்பதை இது விளக்குகிறது:
” உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒருசொன் னடைய பொருள்சென் மருங்கே “
(102)
எ-டு:
தினையின் நுனிக்கண் கிளியைக் கண்டான். இவ்
வாக்கியத்தில் 3 உருபுகள் அடுக்கி வந்தன.
” அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்” ( குறள், 543)
3
” இறுதியும் இடையும் எல்லா வுருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் “
இ-ள்:
வேற்றுமைத் தொடர் இறுதிக்கண்ணும், அதனிடையிலும் ஆறு உருபுகளும் தத்தமக்கு ஓதிய பொருளில் நிற்கும்
எ-று
எ-டு:
கடந்தான் நிலத்தை.
வந்தாள் கணவனொடு.
கொடுத்தான் ஏழைக்கு.
வலியன் பீமனின்.
ஆடை பெண்ணது.
( இவை இறுதியில் வந்தவை)
பெண்ணினது சேலை.
குன்றத்துக்கண் முருகன்.
( இவை இடையில் வந்தவை)
4
ஆகு பெயர்கள் பற்றி ஈண்டுரைப்பது யாவையெனக் காண்போம்.
ஒன்றன் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராக வழங்கி வருவதும், அவ்வாறு ஒன்று மற்றொன்றுக்கு ஆகிவருவதும் ‘ ஆகு பெயர்’ எனப்படும்.
” முதலிற் கூறும் சினையறி கிளவியும்
சினையிற் கூறும் முதலறி கிளவியும்
பிறந்த வழிக் கூறலும்
பண்பு கொள் பெயரும்
இயன்றது மொழிதலும்
இருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்கும் கிளவியொடு தொகைஇ
அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி ” ( 114)
இ-ள்:
(இவற்றின் பொருளை விரித்து, எடுத்துக் காட்டுகளைப் நோக்க, இந்
நூற்பாவின் பொருள் விளங்கும்)
எ-டு:
முதலாகு பெயர் —
முதற் பொருளின் பெயர் சினைப் பொருளுக்கு ஆகி வருவது இது:
‘ மல்லிகை மணம் வீசியது ‘
இங்கு மல்லிகை முதற் பொருளாகிய மரம். பூ சினைப் பெயர். இது பொருளாகுபெயர் எனினும் ஒக்கும்.
- சினையாகு பெயர் —
சினைப் பொருளின் பெயர், முதற் பொருளுக்கு ஆகி வருவது. ‘ வெற்றிலை நட்டான் ‘ – வெற்றிலை வெற்றிலைக் கொடிக்கு ஆகி வந்தது. - இடவாகு பெயர் —
ஓர் இடத்தின் பெயர், அங்குள்ள பொருளுக்கு ஆகி வருவது.
‘ உலகம் விழித்தது ‘
இங்கு உலகம் என்றது அங்கு வாழும் மக்களுக்கு ஆகி வந்தது.
- பண்பாகு பெயர் —
ஒரு பண்பின் பெயர் அப் பண்பையுடைய பொருளுக்கு ஆகி வருவது இது.
‘ மஞ்சள் பூசினாள் ‘
இங்கு மஞ்சள் நிறம், மஞ்சள் கிழங்கிற்கு ஆகி வந்தது.
- காரணாகு பெயர் —
ஒன்றுக்குக் காரணமாய் அமைந்த பொருள், அதனாலான காரியத்திற்கு ஆகி வருவது இது.
‘ சூரியன் சுட்டான் ‘
சூரியனின் கதிர், சூரியனுக்கு ஆகி வந்தது.
- இருபெயரொட்டாகு பெயர் —
இரு ஒத்த பொருட் பிற சொற்கள், ஒரு பொருளைக் குறிக்க ஆகி வருவது இது.
‘ சாரைப் பாம்பு ‘
இங்கு சாரை, பாம்பு என்ற ஒத்த பொருள் இரு பெயர் ஒட்டி வந்து ஒரு பாம்பைக் குறித்தன.
- கருத்தாவாகு பெயர் —
கருத்தாவான செய்தவனின் பெயர், அவனாற் செய்யப்பட்ட பொருளுக்கு ஆகி வருவது இது.
‘ வள்ளுவன் படித்தேன் ‘
‘ சேக்கிழார் கற்றேன் ‘
இங்கு வள்ளுவனும், சேக்கிழாரும் அவர்கள் செய்த நூல் என்ற பொருளுக்கு ஆகி வந்தது.
- இவ் வகுப்பு நிறைவு –