இலக்கண வகுப்பு – 19
தொல்: சொல்: இயல் 2, வேற்றுமையியல் – தொடர்ச்சி
சென்ற வகுப்பில் பெயர் எழுவாய், அதற்கு உருபுகள் இல்லை என்றும், ஏனைய உருபுகளை ஏற்று நடக்கும் என்றும், பயனிலை பெற்று முடியும் என்றும் கற்றுக் கொண்டோம். இன்று ஏனைய வேற்றுமை உருபுகள் எவ்வாறு பொருள் வேற்றுமைகளை ஏற்படுத்துகின்றன என கற்றுக் கொள்வோம்.
1
இரண்டாம் வேற்றுமை, உருபு ‘ஐ’.
“இரண்டா குவதே, ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக் குறிப்பு;
அவ்விரு முதலில் தோன்றும் அதுவே ” ( 71)
இ-ள்:
‘ஐ’ எனப் பெயர்பெற்ற வேற்றுமைச் சொல் இரண்டாவதாம். அஃதியாண்டு வரினும், வினையும் வினைக் குறிப்புமாகிய அவ்விரண்டு முதற் கண்ணும் தோன்றுமவை பொருளாக வரும் எ-று
வினை – தெரிநிலை வினை.
வினைக்குறிப்பு – குறிப்பு வினை எனவறிக
எ-டு:
குடம் வனைந்தான், இது வேற்றுமைத் தொகை.
குடம் + ஐ + வனைந்தான், குடத்தை வனைந்தான், இது வேற்றுமை விரி.
குழை உடையன், இது வேற்றுமைத் தொகை.
குழை+ஐ+உடையன், குழையை உடையன், இது வேற்றுமை விரி.
குடம் என்றது பெயரெழுவாய். ஐ இரண்டாம் வேற்றுமை உருபேற்றுச் செயப்படு பொருளானது. இங்கு வனைந்தான் = தெரிநிலை வினை முற்று.
குழை பெயரெழுவாய், ஐ உருபேற்றுச் செயப்படு பொருளானது. உடையன் = குறிப்பு வினைமுற்று
‘ஐ’ உருபு ஆக்கல் பொருளில் = கோயிலைக் கட்டினான்.
அழித்தல் பொருளில் = வீட்டை இடித்தான்.
அடைதற் பொருளில் = நாட்டை அடைந்தான்.
எ-டு : வள்ளலார் சுவாமிகள், பாடல் 418
” முத்தனை முத்திக் கொருதனி வித்தை
முதல்வனை முருகனை முக்கண் பித்தனை
அத்தன் எனக் கொளும் செல்வப் பிள்ளையைப் பெரியவர் உளஞ் சேர் சுத்தனைப் பத்தி வலைப்படு மவனைத்
துரியனைத் துரியமுங் கடந்த சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
தணிகையிற் கண்டு இறைஞ் சுவனே “
பெருவேளூர்ப் பதிகம், அப்பர் சுவாமிகள் :
” மறையணி நாவினானை
மறப்பிலார் மனத்துளானைக்
கறையணி கண்டன் தன்னைக் கனலெரி ஆடினானைப்
பிறையணி சடையினானைப் பெருவேளூர் பேணினானை
நறையணி மலர்கள்தூவி
நாள்தொறும் வணங்கு வேனே “
2
இனி, மூன்றாம் வேற்றுமை, உருபு – ஒடு
” மூன்றா குவதே, ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி; வினைமுதற் கருவி அனை முதற்றதுவே ” (73)
இ-ள்:
‘ஒடு’ எனப் பெயரிய வேற்றுமைச் சொல் மூன்றாவதாம். அது வினைமுதலும், கருவியுமாகிய இரண்டு முதலையும் பொருளாகவுடைத்து எ-று
எ-டு:
பண் பாடினாள் – வேற்றுமைத் தொகை.
பண்+ ஒடு+ பாடினாள் = பண்ணொடு பாடினாள், வேற்றுமை விரி.
கவனிக்க :
தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமை உருபாக ‘ ஒடு’ என்ற ஒன்றை மட்டுமே குறித்தார். பின்னால் வந்த நன்னூல் ஆல் ஆன் ஒடு ஓடு எனக் குறித்தது.
ஆயின் ‘ ஆன் ‘ உருபும் மூன்றாம் வேற்றுமைச் சொல்லே எனச் சேனாவரையம் உரை செய்கிறது. ஆதலால் தொல்காப்பியர் ஒடு ஆன் இரண்டையுமே குறித்தார் எனக் கொள்ளுதல் வேண்டும். மேலும் பிந்திய ‘ ஆல் ‘ உருபுக்கு நிகராக, ‘ ஆன் ‘ உருபும் அன்றைய பயன்பாட்டில் இருந்தது என்பதும் தெளிவாகிறது.
இவ்வுண்மையை வள்ளுவனார் உறுதி செய்கிறார்:
” அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழு மில ” ( அதி:4, குறள்: 39)
இங்கு ஆல், ஆன் என வந்தமை காண்க.
” புறம் தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும் ” ( அதி:30, குறள்: 298)
இங்கும் நீரான் என்றும், வாய்மையான் என்றும் வந்தமை காண்க.
ஆக, ஆன் ஒடு ஆகிய இரண்டுருபும் தொல்காப்பியர் காலத்தன என்பதும், ஆல் ஓடு உடன் என்பன பிற்காலத்தன என்பது முடிவாம்.
3
இனி நான்காம் வேற்றுமை, ‘ கு ‘ உருபு.
” நான்கா குவதே;
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு ளாயினும் கொள்ளு மதுவே “
( 75)
இ-ள்:
கு எனப் பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைச் சொல் நான்காவதாம். அது யாதானுமொரு பொருளாயினும் அதனை ஏற்று நிற்கும் எ-று
எ-டு:
சம்பந்தருக்குச் சிவிகை கொடுத்தான்
தாளத்துக்கு ஓசை கொடுத்தாள்
” பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கட லீந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் ..”
( சேந்தனார் திருப்பல்லாண்டு)
” முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரந் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே ” (திருமந்திரம்)
4
இனி ஐந்தாம் வேற்றுமை,
‘இன்’ உருபு.
” ஐந்தா குவதே
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்றிது வென்னு மதுவே ” ( 77)
இ-ள்:
இன் எனப் பெயர் கொண்ட வேற்றுமைச் சொல் ஐந்தாவதாம். அஃது ‘ இப்பொருளின் தன்மைத்து இப்பொருள் ‘ என்னும் பொருளை உணர்த்தும் எ-று
அதாவது ‘ ஒன்றைவிட மற்றொன்று ‘ எனுங்கால்
‘இன்’ உருபு வரும்.
எ-டு:
பாலின் வெண்மை நிலவு
வேலின் கூர்மை விழிகள்.
மேலும் இவ்வுருபு நான்கு முக்கிய பொருளிலும் வரும்.
நீங்கற் பொருள்-
மலையின் வீழருவி
ஒப்புப் பொருள்-
தேனின் இனிது தமிழ்
எல்லைப் பொருள்-
கொழும்பின் வடக்கு யாழ்ப்பாணம்
ஏதுப் பொருள்-
செல்வத்தின் பெரிது கல்வி.
” ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் ” ( குறள் 69)
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மை உண்டாகப் பெறின் (குறள் 54)