இலக்கண வகுப்பு – 34
தொல்:சொல்: இயல் -9
எச்சவியல்
1
பிரிநிலை எச்சம்:
”அவற்றுள் பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின”( 431 )
இ-ள்:
மேற் சொல்லப்பட்ட எச்சங்களுள், பிரிநிலை எச்சம் ஏகாரப் பிரிநிலை, ஓகாரப் பிரிநிலையுமென
இரு வகையாம்.
எ-டு:
தானே செய்தான், தானோ செய்தான்?
” கோவலனே கள்வன் “
” என் கேள்வனோ கள்வன்? “
வினை எச்சம் :
“வினையெஞ்சு கிளவிக்கு
வினையும் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபா கும்மே
ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே “(432)
இ-ள்:
வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையும், குறிப்பு வினையும் முடிபாம். ஆண்டு குறிப்பு வினை ஆக்க வினையோடு வரும் எ-று
எ-டு:
உழுது வந்தான். மருந்துண்டு தேறினான்.
பெயரெச்சம் :
“பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே ” (433)
இ-ள்:
பெயரெச்சம் பெயரொடு முடியும் எ-று
எ-டு:
உண்ணும் யாசகன்,
உண்ட யாசகன்,
வணங்கிய அடியவன்,
வணங்கும் அம்மையார்,
எனப் பலவாறு வரும்.
அபிராமி அந்தாதி :
“ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே”
எதிர்மறை எச்சம் :
” எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின ” (435)
இ-ள்:
ஏகார எதிர்மறையும், ஓகார எதிர்மறையும், உம்மை எதிர்மறையும் ஆகிய மூன்றும் எதிர்மறையான் முடியும் எ-று
எ-டு:
யானே ஏற்பேன்? – ஏற்க மாட்டேன்.
யானோ கள்வேன்? – கள்ளேன்
வரலும் உரியவன் – வராமைக்கும் உரியவன்.
மூன்றும் எதிர்மறையான் முடிந்தமை காண்க!
எனவென் எச்சம் :
” எனவென் எச்சம் வினையொடு முடிமே ” (438)
இ-ள்:
எனவென்ற எச்சம் வினை கொண்டு முடியும் எ-று
எ-டு:
வருக என வரவேற்றான்
கொள் எனக் கொடுத்தான்.
என என்றது என்று எனவும் வரும்.
பட்டினத்துச் சித்தர் பாடல் :
“ஒன்றென் றிருதெய்வம் உண்டென்றிரு
உயர் செல்வமெல்லாம் அன்றென் றிரு
பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும் நன்றென் றிரு
நடு நீங்காமலே நமக்கிட்ட படி என்றென்று உளமே நினை “
அப்பர் திருமுறை 6:
இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்
சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்
தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்
ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. 1
சொல்லெச்சம் :
சொல் மறைந்து நின்று பொருள் தருவது.
எ-டு:
” பசிக்கிறது, சோறு போடுங்கள் “
குறிப்பெச்சம்:
குறிப்பால் பொருளை உணர்த்துவது,
எ-டு:
“இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து ” ( வள்ளுவன் 879)
இசை எச்சம் :
பொருளை இசைவாக மறைத்து உரைத்தல்.
எ-டு
மகப்பேற்றுக்குத் திகதி குறிக்கப்பட்டோர் பத்துப் பேர் — இது அறிவித்தல், இங்கு பத்துப் பேரும் பெண்கள் என்பது இசை
எச்சம்.
இறுதியாக,
“செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின்கண்
சொல்லப்பட்ட சொல் எல்லாவற்றையும், தொன்னூல் நெறியிற் பிழையாது சொல்லை வேறுபடுத்தி உணரும் ஆற்றலால் பிரித்துக் காட்டுக “
என்று புறனடை நூற்பா (463)
மூலம் உரைத்து, சொல்லதிகாரத்தைத் தொல்காப்பியர் நிறைவு செய்கிறார்.
- சொல்லதிகாரம் நிறைவு –