திருமுறை 1

திருஞான சம்பந்த சுவாமிகள் அருளியது

  • பதிகம்:135, ஊர்: திரு பராய்த்துறை

    பதிகம்:135, ஊர்: திரு பராய்த்துறை
    பண்: மேகராகக்குறிஞ்சி இராகம்: நீலாம்பரி

    நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
    கூறுசேர்வதொர் கோலமாய்ப்
    பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
    ஆறுசேர்சடை அண்ணலே

    கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
    வந்தபூம்புனல் வைத்தவர்
    பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
    அந்தமில்ல அடிகளே

    வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
    தோதநின்ற வொருவனார்
    பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
    ஆதியாய அடிகளே

    தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
    நூலுந்தாமணி மார்பினர்
    பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
    ஆலநீழல் அடிகளே

    விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
    இரவில்நின்றெரி யாடுவர்
    பரவினாரவர் வேதம்பராய்த்துறை
    அரவமார்த்த அடிகளே

    மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
    கறைகொள்கண்ட முடையவர்
    பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
    அறையநின்ற அடிகளே

    விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
    சடையிற்கங்கை தரித்தவர்
    படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
    அடையநின்ற அடிகளே

    தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
    நெருக்கினார்விர லொன்றினால்
    பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
    அருக்கன்றன்னை அடிகளே

    நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
    தோற்றமும் மறியாதவர்
    பாற்றினார்வினை யானபராய்த்துறை
    ஆற்றல்மிக்க அடிகளே

    திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
    உருவிலாவுரை கொள்ளேலும்
    பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
    மருவினான்றனை வாழ்த்துமே

    செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
    செல்வர்மேற்சிதை யாதன
    செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ்
    செல்வமாமிவை செப்பவே
    திருச்சிற்றம்பலம்