Class 13

இலக்கண வகுப்பு – 13
தொல்: எழு: இயல் -9

‘ குற்றியலுகரப் புணரியல் ” 18-02-26

இது எழுத்ததிகாரத்தின் இறுதி இயலாகும். குற்றியலுகர ஈறுகளுக்குரிய புணர்ச்சி இலக்கணம் இங்கு விளக்கப்படுகிறது. குற்றியலுகரம் நிலைமொழியாயிருந்து, வருமொழிகளுடன் புணரும் இயல்புகளை இங்கு நாம் கற்கலாம். இதில் 77 நூற்பாக்கள் காணப்படுகின்றன.
1
குற்றியலுகரங்கள் பற்றி நாம் முன்பே கற்றிருக்கிறோம். அவை 6 வகைகளாகும், அவற்றின் பெயர், முறை, தொகை பற்றித் தலைச் சூத்திரம் உரைப்பதைப் பார்ப்போம்.

” ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி
வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன் ” ( 1-407)

இ-ள்:
இரண்டெழுத்தாலாகிய ஒருமொழியும், உயிர்தொடர்மொழியும், இடைதொடர்மொழியும், ஆஃதத் தொடர்மொழியும், வன்தொடர்மொழியும், மென்தொடர்மொழியும் ஆகிய அவ்வாறும் உகரம் குறுகிவரும் இடனாம் எ-று

எ-டு:
ஏற்கனவே பார்த்தவற்றை இப்போது மீட்டிப் பார்ப்போம்.
நாகு – ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரம்
வரகு – உயிர்தொடர் குற்றியலுகரம்
தெள்கு – இடைதொடர் குற்றியலுகரம்
எஃகு – ஆய்ததொடர் குற்றியலுகரம்
கொக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம்
குரங்கு – மென்றொடர்க் குற்றியலுகரம்

2
அவற்றுள், ஈரொற்று வரும் தொடர்களின் நிலை யாது?
” அவற்றுள், ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத் தொடராகா ” ( 2-408)

இ-ள்:
ஈரொற்றுகள் வருந் தொடர்கள் இடைத் தொடர்கள் ஆகாது. ( அவற்றை வன்றொடர், மென்றொடர் குற்றியலுகரமாகவே கொள்ளுதல் வேண்டும்)

எ-டு:
ஈர்க்கு, மொய்ம்பு ( தோள்வலிமை, வீரம்)
இந் நிலையிலும் உகரம் 1/2 மாத்திரை குறுகி ஒலிக்கும்.

3
அடுத்து, குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி ஒன்றினை ஆசிரியர் சுட்டுகிறார்:
” வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் “
( 15-421) copied

இ-ள்:
வண்டு எனும் சொல்லும் பெண்டு எனும் சொல்லும்
‘ இன் ‘ சாரியையைப் பொருந்தும் எ-று

இவ்விரண்டும் மென்றொடர்க் குற்றியலுகரங்களாகும்.

எ-டு:
வண்டு+கால்= வண்டின் கால்
பெண்டு+கண்= பெண்டின் கண்
வண்டு+சிறகு= வண்டின் சிறகு
பெண்டு+சேலை= பெண்டின் சேலை
( இன்றைய வழக்கில்
பெண்+கண்= பெண்ணின் கண் பெண்+சேலை= பெண்ணின் சேலை. ஆயினும் இன் சாரியை மாறாமல் வந்தமை காண்க ) copied

4
இனி, ஆங்கு யாங்கு முதலிய மென்றொடர்க் குற்றியலுகரங்களின் புணர்ச்சி விதி கூறுகிறார்:

” சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்
யாவினா முதலிய மென்றொடர் மொழியும்
ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை “
( 22-428)
மேலும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச் சொற்கும் இது முடிபாம், copied

இ-ள்:
சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர் மொழிக் குற்றியலுகர ஈறும், யாவென்னும் வினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வல்லெழுத்து இயற்கையாகிய அவ்வியல்பில் திரியாது முடியும் எ-று copied

எ-டு:
ஆங்கு+கொண்டான்= ஆங்குக் கொண்டான்
ஈங்கு+கொண்டான்= ஈங்குக் கொண்டான்
ஊங்கு+கொண்டான்= ஊங்குக் கொண்டான்

அவ்வாறே யாங்குக் கொண்டான் ? என வினாவாகவும் ஒலிக்கும்.
அங்கு ஆங்கென்றும், இங்கு ஈங்கென்றும், உங்கு ஊங்கென்றும் முதல்நீண்டு வந்தன. copied

இதனைக் கவிச்சக்கரவர்த்தி தனது கவியிலே காட்டுகிறார் :

அங்கு, இங்கு என்ற சுட்டுச் சினைச் சொற்களை அடுத்து, வல்லினம் வருமொழியாக வர, அவ்வல்லினம் மிகும் என்ற இலக்கண விதியை கம்பன் காட்டுகிறான்.

அகலிகை சாபவிமோசனப் படலம், பால காண்டம். கல்லாய்க் கிடந்த அகலிகை மீது இராமனின் பாததூளி பட்டதும், அவள் உயிர் பெற்றெழுகிறாள். இது கண்ட விசுவாமித்திர முனிவன் இவ்வாறு கூறுகிறான் : copied

” …மை வண்ணத் தரக்கி போரில்
மழை வண்ணத் தண்ணலே யுன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன் ..” copied

தொடர்ச்சி …
5
‘ பத்து ‘ என்ற குற்றியலுகர ஈற்றுப் பெயர் ( எண்ணுப் பெயர்) புணர்ச்சி பற்றியது இது:

” ஒன்று முதலாக எட்ட னிறுதி எல்லா வெண்ணும் பத்தன் முன்வரின் குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே முற்ற இன் வரூஉம் இரண்டலங் கடையே “
( 28-434) copied

இ-ள்:
ஒன்று என்னும் சொல் முதலாக, எட்டு என்னும் சொல் இறுதியாகவுள்ள எல்லா எண்ணுப் பெயரும், பத்து எனும் எண்ணுப்பெயர் முன்வரின், அப் பத்து எனும் சொல்லின் குற்றியலுகரம் மெய்யொடும் கெட்டு முடியும். இரண்டாம் எண்ணுப் பெயரல்லாத எண்ணுப் பெயரிடத்து முடிய, இன் வந்து புணரும் எ-று copied

எ-டு:
பத்து+இன்+ஒன்று= பதினொன்று, இவ்வாறு இரண்டு தவிர்த்து எட்டுவரை ஒட்டுக.

பண்டைத் தமிழ் வழக்கின் படி, இவ்வெண்ணுப் பெயர்கள் ‘ இற்று ‘ சாரியை பெற்று வழங்கின. பத்து ‘ இன் ‘ சாரியை பெற்று வந்தமை போலவே, ‘ இற்று ‘ சாரியையும் பெற்று வழங்கலாயின. Copied

எ-டு:
பத்து+ஒன்று= பதிற்றொன்று. இங்கு இற்று சாரியை பெற்றது.
பத்து+பத்து= பதிற்றுப் பத்து. பின்னர் பப்பத்து என வழங்கவாரம்பித்தது.

மேலும் பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றுமூன்று, பதிற்றுநான்கு, பதிற்றைந்து, பதிற்றாறு, பதிற்றேழு, பதிற்றெட்டு, பதிற்றொன்பது என வழங்கலாயின. Copied

( சங்கத் தொகை இலக்கிய நூல்களாவன பத்துப்பாட்டும், எட்டுத் தொகையுமாம். இவ் வெட்டுத் தொகை நூல்களுள் ‘ பதிற்றுப் பத்து ‘ என்ற நூலும் ஒன்றாகும். சேர மன்னர்களின் வரலாறுகளைப் பத்துப் பத்தாக, பத்து கொண்டதனால், இதற்குப்
‘ பதிற்றுப் பத்து ‘ என்று பெயரானது. ஆக 10×10 = 100 பாடல்களைக் கொண்டது. ( எட்டுத் தொகை நூல்கள் = நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு )

— இவ் வகுப்பு நிறைவு)