Class 20

இலக்கண வகுப்பு – 20
தொல்:சொல்: வேற்றுமையியல் – தொடர்ச்சி :

1
இனி ‘ ஆறாம் வேற்றுமை உருபு – ‘ அது ‘ என்பதனை விளக்குகிறார்.

” ஆறா குவதே, அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்
அன்ன கிளவிக் கிழமைத்
ததுவே ” ( 79)

இ-ள்:
‘அது’ எனப் பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஆறாவதாம். ‘அது’ உடையதாய் நிற்குந் தன்னானும், பிறிதொன்றானும் ‘ இதனது இது ‘என்பது படநிற்கும் கிளவியில் தோன்றும் கிழமையைப் பொருளாகவுடைத்து எ-று

இவ்வுருபு ‘கிழமைப் ( உடைமை) பொருளில் வருவதாம். அது தன்னான் வந்த ‘தற்கிழமை’ என்றும், பிறிதான் வந்த ‘பிறிதின் கிழமை’ என்றும் இருவகையாம்.

‘தன்’ என்றது தன்னோடு ஒற்றுமையுடைய பொருள் எனவும், ‘ பிறிது ‘ என்றது தன்னின் வேறாகிய பொருள் எனவும் தெளிக.

தொல்காப்பியர் காலத்தே அது ஆது அ என்ற மூன்றும், உருபுகளாக வழங்கின. அது ஆது ஒருமைக்கும், அ பன்மைக்கும் வரும். ஆது இன்று வழக்கிலில்லை.

எ-டு:
முருகனது கை — தற்கிழமை – பிரிக்க முடியாதது

மன்னனது படை — பிறிதின் கிழமை — பிரிக்கக் கூடுவது

இன்றைய வழக்கில் ‘ உடைய ‘ என்ற சொல்லுருபும் வழக்கிலுள்ளது. சங்க காலத்தேயே தோன்றியது.

7ஆம் நூற்றாண்டில் சம்பந்தரும் ” தோடு உடைய, காடுஉடைய, ஏடு உடைய, பீடு உடைய என்றார்.

” இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனது கழல்
தொழுதெழுவேன்…..
உனது இன்னருள் …”
( சம்பந்தப் பெருமான்)

எனதுறு நோய் = பிறிதின் கிழமை
உனகழல் = தற்கிழமை
உனதின்னருள் = பிறிதின் கிழமை

2
ஏழாம் வேற்றுமை, உருபு:
‘ கண் ‘ ஆகும்.

” ஏழா குவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின்
தோன்று மதுவே ” ( 81)

கண் என்பது இடத்தைக் குறிக்கும். இடம் என்றது வினை நிகழும் இடத்தையாகும். இது இடம், நிலம், காலம் ஆகிய மூவகைக் குறிப்புப் பொருளிலும் வரும்வகை காண்க.

எ-டு:
போராளி களத்தின்கண் நின்றான். களம் =
நிலப்பொருள்.

சீதை மாடத்தின்கண் பந்தாடினாள். மாடம் = இடப்பொருள்.

விடியற்கண் மணி ஒலித்தது. விடியல் = காலப் பொருள்.

( வேற்றுமையியல் நிறைய, வேற்றுமை மயங்கியல் ஆரம்பம்)

வேற்றுமை மயங்கியல் – இயல் – 3

ஒரு தொடர்வாக்கியத்தின் அல்லது ஒரு மொழியின் பொருள் அதன் இயல்பினால் தன்னிலை வேறுபடுவது ‘வேற்றுமை’ என்றும், அவை 8 வகைத்தன என்றும், அவற்றில் 6 வேற்றுமைகளும் எவ்வெவ் உருபுகளுடன் வந்தன என்றும், அவ்வேளையில் அவை எவ்வாறு இயங்கின என்றும் வேற்றுமையியலில் கற்றோம்.

இவ்வியலில் அவை எவ்வாறு மயங்கி வந்து பொருள் தருகின்றன என்பதை அறிந்து கொள்வோம்.

3
” கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையு முடைத்தே
கண்ணென் வேற்றுமை “
( 84)

இ-ள்:
இரண்டாவதற்கு (ஐ) சொல்லப்பட்ட சார்புப் பொருண்மையானது,
‘ கருமச் சார்பு ‘ கருமமல்லாச் சார்பு ‘ என இரு வகைப்படும். இதற்குக் ‘கண்’ என்ற ஏழாம் உருபு காரணமாம்.

  1. தூணைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு. ஒன்றை ஒன்று மெய்யுறுதல்.
  2. தந்தையைச் சார்ந்தான் — இது கருமமல்லாச் சார்பு.
    இது மெய்யுறுதல் அல்லாத சார்பு.

இந்தக் கருமமல்லாச் சார்புக்கு ‘கண்’ என்ற உருபு மயங்கி வரும்,
அதாவது,
‘தந்தையைச் சார்ந்தான்’ என்றது ‘ தந்தைக்கண் சார்ந்தான்’ எனவும் மயங்கி வரும்.

4
இதே மயக்கம் வருமாறு:

” சினைநிலைக் கிளவிக்கு
ஐயுங் கண்ணும்
வினைநிலை யொக்கும்
என்மனார் புலவர் ” (85)

இ-ள்:
சினைமேல் நிற்கும் சொல்லிற்கு இரண்டாவதும், ஏழாவதும் வினைநிலையிலே ஒக்கும் எ-று

எ-டு:
கிளையை வெட்டினான்,
கிளையின்கண் வெட்டினான்.

பிரமனின் தலையைக் கிள்ளினான், பிரமனின் தலையின்கண் கிள்ளினான்.

5
இனி, மூன்று உருபுகள் மயங்கி வந்தமையை விளக்குகிறார்:

” இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம் அவ்
இரண்டன் மருங்கின் ஏதுவு மாகும்” ( 93)

இ-ள்:
‘ நோக்குதல் ‘ இரண்டு வகை.

கண்ணால் நோக்குதல் = நோக்கிய நோக்கம்.

மனத்தால் நோக்குதல் =
நோக்கல் நோக்கம்.
இவை மூன்றாவதற்கும் (ஆன்), ஐந்தாவதற்கும் (இன்) பொருளாய் வரும் எ-று

எ-டு:

” வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழும் குடி “
( குறள் – 542)

இங்கு வள்ளுவனார் வான் நோக்கி, கோன் நோக்கி என்றவை வேற்றுமைத் தொகை. விரிக்கும் போது உருபுகள் வெளிப்படும்.

  1. வானை நோக்கி, கோனை நோக்கி — இங்கு ஐ உருபு (2) நின்றது.
  2. வானான் நோக்கி, கோனான் நோக்கி — இங்கு ஆன் உருபு (3) நின்றது.

3 வானின் நோக்கி, கோனின் நோக்கி — இங்கு
இன் உருபு (5) நின்றது.

  • இவ்வகுப்பு நிறைவு —