Class 7

1 புணர்ச்சிக்குரிய இருமொழிகளின் இயல்பு:

” உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று
இவ்வென வறியக் கிளக்குங் காலை
நிறுத்தச் சொல்லே குறித்துவரு கிளவியென்று ஆயீரியல
புணர்நிலைச் சுட்டே ” (5-108)

மூன்று சொற்கள் புணர வராதென்றும், இரு சொற்களே புணர்வதற்குரியன என்றும், அவ்வகையால் புணர்ச்சிகள் நால்வகை என்றும் இச் சூத்திரம் உணர்த்திற்று.

அவையாவன :

  1. உயிரீறும் உயிர்முதலும் புணர்தல்
  2. உயிரீறும் மெய்முதலும் புணர்தல்
  3. மெய்யீறும் உயிர்முதலும் புணர்தல்
  4. மெய்யீறும் மெய்முதலும் புணர்தல்.

எ-டு :
ஆ + உறங்கிற்று = ஆவுறங்கிற்று
ஈ + மொய்த்தது = ஈமொய்த்தது.
ஆல் + இலை = ஆலிலை
ஆல் + வீழ்ந்தது = ஆல்வீழ்ந்தது.

இவ்வாறு நால்வகைப் புணர்ச்சிகளும் நிகழுங்காலை, மூவகைத் திரிபுகள் தோன்றும்.

“அவைதாம்; மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று இவ்வென மொழிப திரியுமாறே ” (7-110)

அவை : தோன்றல் திரிதல் கெடுதல் என பின்னைய இலக்கணவாதிகள் உரைப்பர், இவற்றை நன்னூலார் ‘ இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி ‘ எனக் கூறுகிறார்.
எ-டு:
பொன்+ குடம் = பொற்குடம்
( இது மெய் பிறிதாதல் என்ற திரிதல்)
யானை+கோடு = யானைக்கோடு ( இது மிகுதல் என்ற தோன்றல்)
மரம்+ வேர் = மரவேர் ( இது குன்றல் என்ற கெடுதல்)

தொல்: எழு: புணரியல் தொடர்ச்சி.
1
இங்கு இருவகைப் புணர்ச்சி பேசப்படுகிறது.

” வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும் எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காலை ” (10-113)

இ-ள்:
வேற்றுமையின் பொருண்மையைக் குறித்த புணர்மொழியின்
நிலைமையும், வேற்றுமை அல்லாத அல்வழியிடத்துப் புணர்மொழியின் நிலைமையும், புணர்ச்சிக்கண் எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டு இலக்கணத்தினாலும், நடாத்துதலை வலியாயுடையன எ-று

அதாவது வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்ற இருவகைப் புணர்ச்சி ஈண்டு காட்டினார்.
எ-டு:
சிவன் மகன் முருகன்–
இது வேற்றுமைத்தொகை, பொருளை வேறுபடுத்திக் காட்டுவது ‘ வேற்றுமை ‘ என்ப.
கொல்யானை– இது அல்வழிப் புணர்ச்சி

2
அடுத்து ‘ உருபுப் புணர்ச்சி’ யில் வேற்றுமை உருபுகள் எவையெனக் குறிக்கிறார்.

“ஐஒடு குஇன் அதுகண் என்னும் அவ்வா
றென்ப வேற்றுமை யுருபே” (11-114)

இ-ள்:
ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும் அவ்வாறும் ‘ வேற்றுமை உருபுகள் ‘ என்பர். இந்த ஆறும் அல்லாதன எல்லாம் ‘ அல்வழி ‘ எனப்படும். அவை:
எழுவாய், விளி, உவமைத் தொகை, உம்மைத் தொகை, பண்புத் தொகை, இருபெயரொட்டுப் பண்புத் தொகை, முற்று, இருவகை எச்சங்கள், இடை, உரி என்பனவாம்.

3
வலி முதலுருபுகள் புணரும் நிலை எவ்வாறென ஈண்டு விளக்குகிறார். இது நான்காவது வேற்றுமை உருபாகிய ‘ கு ‘ உக்கும், ஏழாவது ‘ கண் ‘ என்றதற்கும் புணர்ச்சி நிலை பற்றி இச் சூத்திரம் உணர்த்திற்று.

“வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு ஒல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும் ” ( 12- 115)

இ-ள்:
வல்லெழுத்து முதலாகவுடைய வேற்றுமை உருபிற்கு, பொருந்தியவிடத்து வல்லொற்றாயினும், மெல்லொற்றாயினும் இடைக்கண் மிகுதல் வேண்டும் எ-று
எ-டு:
ஊர் + கு = ஊர்க்கு. நீர்+ கு = நீர்க்கு. இங்கு ‘ க் ‘ மிகுந்தது. ஊர்+ கண் = ஊர்க்கண்.

4
இச் சூத்திரத்தினூடே ‘ அது ‘ உருபின் அகரம் கெடும் முறையைக் காட்டுகிறார். அது = ஆறாம் வேற்றுமை உருபாம்.

“ஆறன் உருபின் அகரக் கிளவி,
ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும் ” ( 13-116 )

இ-ள்:
ஆறாம் வேற்றுமை உருபாகிய ‘ அது ‘ என்னும் சொல்லினுடைய அகரமா கிய எழுத்து, மொழியீற்றே உளதாகிய அகரத்தின் முன்னர் தான் கெடுதல் வேண்டும் எ-று
எ-டு:
நம் + அது = நமது. எமது, தனது, எனது, நினது எனவரும்.

5
இனி சாரியை பற்றியும் அதன் புணர்ச்சி பற்றியும் குறிக்கிறார். சாரியை ஆவது தனித்துப் பொருள் தராமல் சொற்களுக்கிடையே பொருளை வலுப்படுத்தவும், ஒலியின்பம் தரவும் சார்பாக வருவதாகும். இதனை ‘ இடைச்சொல்’ என்றுங் குறிப்பர். ( Increment, wings, Aligning part)

“அவைதாம்; இன்னே வற்றே அத்தே
அம்மே ஒன்னே ஆனே அக்கே
இக்கே அன்னென் கிளவி உளப்படப்
பிறவும் அன்ன என்ப சாரியை மொழியே ” (17 – 120)

இ- ள்:
மேலே சாரியை எனப்பட்டவை, இன் வற்று அத்து அம் ஒன் ஆன் அக்கு இக்கு அன் என்ற ஒன்பதும் பிறவுமாம். பிறவுமென்றது, தம் நும் எம் கெழு ஏ ஐ ஞான்று என்பனவும் கொள்க.

எ-டு
இன்:
குழை+இன்+அன் = குழையினன்.


“போதையார் பொன்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே “
(ஞானசம்பந்தர், 3-24)

அத்து:
மரம்+அத்து+ஐ = மரத்தை
மரம்+அத்து+ இல் = மரத்தில்.
பரம்+அத்து+ஐ = பரத்தை
பரம்*அத்து+இல் = பரத்தில்

” மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே “
( திருமந்திரம்)

அம் :
“சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந் தனி இருப்பார்க்கு இதுபோலும் தவமில்லையே “
(அ/அந்தாதி)