Class 8

இலக்கண வகுப்பு – 8

தொல்: எழு: புணரியல்.

சென்ற வகுப்பில் நால்வகைப் புணர்ச்சிகளைக் கற்றோம்,

  1. வேற்றுமைப் புணர்ச்சி
  2. அல்வழிப் புணர்ச்சி
  3. உருபுப் புணர்ச்சி
  4. சாரியைப் புணர்ச்சி.

1
எழுத்துச் சாரியை:
ஏலவே சொன்ன
விளக்கத்திற்கு மேலாக, இன்னுமொரு சாரியை வகை இதுவெனலாம்.
அவை : காரம் கரம் கான்

நெட்டெழுத்துச் சாரியை ஆவன:

“அவற்றுள் கரமும் கானும் நெட்டெழுத் திலவே” (33-136)

எழுத்துச் சாரியைகளில் கரமும் கானும் நெட்டெழுத்திற்கு உரியன அல்ல. ஆக, நெட்டெழுத்துக்கு காரமும், கானும் இணைந்து வரும்.

எ-டு: ஆகாரம் ஈகாரம் ஊகாரம் …ஐகாரம் ஔகாரம். ( ஐகான் ஔகான் எனவும் வரும்)

குற்றெழுத்துச் சாரியை:
கரம் கான்
எ-டு:
அகரம்…அஃகான்

ஆயினும் குற்றெழுத்துகளுக்கும் காரச் சாரியை குற்றமில்லை என்பர்.
எ-டு:
பிரணவ மந்திர சேர்க்கை அகாரவுகாரமகாரம் என்பதாலறிக.
2
மெய்யோடு புணர்ந்த உயிர், அம்மெய்யை நீங்கின் என்னவாம்?

“மெய்யுயிர் நீங்கின் தன்னுரு வாகும் ” (37-140)


மெய்யானது தன்னோடு கூடிய உயிரை நீங்குமிடத்து தனக்கே உரிய உருவைப் பெறும்.
( சைவசித்தாந்தம்: உயிரை நீங்கிய உடல் பிரகிருதி மாயா காரியங்களான பஞ்ச பூதங்களாகித் தனது மூல உருவினை அடையும் )
3
உடம்படு மெய் :
நிறுத்தச் சொல் (நிலைமொழி) ஈற்றிலும், குறித்துவரு கிளவி (வருமொழி) முதலிலும் உள்ள இரு உயிர்களைச் சேர்க்கும் ‘ மெய்யெ ழுத்துகள்’ உடம்படுமெய் எனப்படும்.

“எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு
மெய்யின் உருபு கொளல் வரையார் ” ( 38-141)

இ-ள் :
எல்லாவகை மொழிகளுக்கும் ( தனிமொழி தொடர்மொழி பொதுமொழி) உயிர் முதலாக வருமிடத்து, அவற்றிடை ‘ உடம்படு மெய்’ உருபுகொளும்.
யகரமும் வகரமும் உடம்படு
மெய்களாம். இகரவீறும், ஈகாரவீறும், ஐகாரவீறும் யகர உடம்படுமெய்யும், அல்லனவெல்லாம் வகர உடம்படுமெய்யும் கொள்ளுமெனவறிக.
எ-டு:
கிளி + அழகு = கிளியழகு
விழி+அகலம்= விழியகலம்
கலை+அழகு = கலையழகு

கோ+இல் = கோவில்
பூ+இதழ் = பூவிதழ்
பா+இலக்கணம்= பாவிலக்கணம்.

( புணரியல் நிறைவு )

இலக்கண வகுப்பு – 8 தொடர்ச்சி:

தொகை மரபு – இயல் 5

இவ்வியல், பின்னால் வரும் இயல்களான உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல்
ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.
‘ தொகை ‘ என்பது தொக்க நிற்பது, தொகுக்கப்பட்டது எனப் பொருள் கொள்ளும்.
இலக்கண நூல்களில் இவ்வாறு தொகை அமைவது மரபாகும் என்பதனால் ‘ தொகை மரபு ‘ எனப் பெயர் பெற்றது.
1
மெல்லினம் தோன்றுமிடம் எங்ஙனம் என்பதை இத் தலைச் சூத்திரம் விளக்கும். மெல்லின எழுத்துகள் ஆறு, அவற்றுள் ங ஞ ந ம என்ற நான்கெழுத்துகளும் தோன்றுமாறு காண்போம்:
” கசதப முதலிய மொழிமேல் தோன்றும்
மெல்லெழுத் தியற்கை
சொல்லிய முறையான்

ஙஞநம வென்னும் ஒற்றா கும்மே
அன்ன மரபின் மொழிவயி னான ” (1-144)

இ-ள்:
உயிரீற்றிலும் புள்ளியீற்றிலும் இருவழியும், கசதப க்களை முதலாகவுடைய மொழிகளின் மேல் தோன்றும் மெல்லெழுத்துகளின் இயல்பு கூறின், மெல்லெழுத்து மேற் சொல்லும் முறையிலான கசதப க்களுக்கு நிரனிறை வகையான் ஙஞநம என்னும் ஒற்றாகும்.
உயிரீற்றுக்கு :
பூ+கடம்பு= பூங்கடம்பு
பூ+சோலை = பூஞ்சோலை
மா+தளிர்= மாந்தளிர்
பூ+பந்து= பூம்பந்து
பூ+பாவை= பூம்பாவை.
புள்ளியீற்றுக்கு:
மரம்+கொத்தி= மரங்கொத்தி
மரம்+சிறிது= மரஞ்சிறிது
குடம்+தேய்ந்தது= குடந்தேய்ந்தது
படம்+பெரியது= படம்பெரியது.
2
விரவுப் பெயர்:
உயர்திணை, அஃறிணை எனும் இரு திணைகளிலும், ஐம்பால்களிலும் விரவி வரும் பெயர்கள் ‘ விரவுப் பெயர் ‘ ஆகும்.
இவை:
திணை விரவுப் பெயர், பால் விரவுப் பெயர், சினை விரவுப் பெயர், சினைமுதல் விரவுப் பெயர், முறை விரவுப் பெயர் என பலவாய் வரும்.

“அஃறிணை விரவுப் பெயர் இயல்பு மாருளவே “( 13-156)

இ-ள்:
(உயர்திணையோடு) அஃறிணை விரவும் விரவுப் பெயர், இயல்பாய் முடிவனவுமுள, இயல்பின்றி முடிவனவும் உள- எ-று
எ-டு:
சிவந்தன், சாத்தன் — இரு திணைகளுக்கும் விரவியது. இது திணை விரவுப் பெயர்.
சிவந்தி, சாத்தி — இரு பாலுக்கும் விரவியது. இது பால் விரவுப் பெயர்.
முடவன், முடத்தி — சினை விரவுப் பெயர்
சீழ்த்தலைச் சாத்தனார், சீழ்த்தலைச் சாத்தியாள் – இது சினை முதல் விரவுப் பெயர்
தந்தை, தாய், தான், தாம் – இவை முறை விரவுப் பெயர்.
( இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட – அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன
தாம் விளையாட)

3
யாவர், யாது எனும் சொற்களின் ‘ மரூஉ’ .
காலப் போக்கில் சிதைந்து உருமாறி வேறுபட்டு நிற்கும் சொற்கள் ‘மரூஉ’ ச் சொற்கள் எனப்படும்.

“பலரறி சொன்முன் யாவ ரென்னும்
பெயரிடை வகரங் கெடுதலு மேனை
ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை
ஒன்றிய வகரம் வருதலு மிரண்டும்
மருவின் பாத்தியின் திரியமன் பயின்றே “
(30-173)

இ-ள்:
பலரை அறியும் சொல் முன்னர் வருகின்ற ‘யாவர்’
என்னும் பெயரிடையில் வகரம் கெடுதலும், ஒழிந்த ஒன்றனை அறியும் சொல்முன்னர் வரும் ‘யாது’ எனும் வினா மொழியிடையே உயிரோடு பொருந்திய வகரம் வருதலும், ஆகியவிரண்டும் மரூஉ க்களது முடிவினிடத்தே பயின்று வழங்கும் எ-று.

எ-டு:
அவர் யாவர்? – அவர் யார்?
இங்கே வகரம் கெட்டது

அது யாது? – அது யாவது?
இங்கே வகரம் வந்தது.

பலரறி சொல், ஒன்றறி சொல் ஆகிய தொல்காப்பியரின் சொல்லாட்சியை நோக்குக!

— தொகை மரபு நிறைவு –

இவை எடுத்துக்காட்டுப் பாக்கள் :
1
மெல்லினம் தோன்றுமிடம்:

“ஏத்து மடியவ ரீரே ழுலகினை யும்படைத்தும்‌
காத்து மழித்துந்‌ திரிபவ ராங்கமழ்‌ பூங்கடம்பு
சாத்துங்‌ குழலணங்‌ கேமண நாறுநின்‌ றாளிணைக்கென்‌
நாத்தங்கு புன்மொழி யேறிய வாறு நகையுடைத்தே. “ (அ/அந்தாதி 26)

” மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!”
(திருஞானசம்பந்தரின் பூம்பாவை திருப்பதிகம்)

இதில் 10 தடவைகள் வரும்.

2
விரவுப் பெயர்:
தான் —
” காணாதான் காட்டுவான் தான்காணான் கணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு ” ( தி/குறள் 849)
தாம்–
” தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் ” (398)
3
யார்?
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ” ( குறள் 423)