திருவாசகம்

  • 23 செத்திலாப் பத்து

    23 செத்திலாப் பத்து
    பதிகச் சிறப்பு: சிவானந்தம் அளவறுக்கொணாமை
    யாப்பு: ஆசிரிய விருத்தம்

    தலம்: திரு பெருந்துறை
    இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
    இறைவி: யோகாம்பாள்
    இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.

    தலக்குறிப்பு:
    மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்
    புதும லர்க்கழல் இணையடி பிரிந்தும்
    கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
    விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
    ஐயனே அரசே அருட்பெருங் கடலே
    அத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச்
    செய்யமே னியனே செய்வகை அறியேன்
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 1

    புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
    உண்டியாய் அண்ட வாணரும் பிறரும்
    வற்றி யாரும்நின் மலரடி காணா
    மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
    பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்
    பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
    செற்றிலேன் இன்னுந் திரிதரு கின்றேன்
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 2

    புலைய னேனையும் பொருளென நினைந்துன்
    அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத்
    தலையி னால்நடந் தேன்விடைப் பாகா
    சங்கரா எண்ணில் வானவர்க் கெல்லாம்
    நிலைய னேஅலை நீர்விட முண்ட
    நித்த னேஅடை யார்புர மெரித்த
    சிலைய னேயெனைச் செத்திடப் பணியாய்
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 3

    அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்
    அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
    என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
    நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
    வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை
    மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
    தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 4

    ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்
    ஐயனே யென்றுன் அருள்வழி இருப்பேன்
    நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
    நாத னேஉனைப் பிரிவுறா அருளைக்
    காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
    காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
    சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 5

    அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்கு
    ஆர்கி லேன்திரு வருள்வகை யறியேன்
    பொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன்
    போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
    இறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க
    என்செய் கேன்இது செய்கவென் றருளாய்
    சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 6

    மாய னேமறி கடல்விட முண்ட
    வான வாமணி கண்டத்தெம் அமுதே
    நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
    நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
    பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
    பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
    சேய னாகிநின் றலறுவ தழகோ
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 7

    போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
    புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்
    கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
    குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் கூட்டாய்
    யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
    அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ
    சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 8

    ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
    நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
    காலன் ஆருயிர் கொண்டபூங் கழலாய்
    கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
    மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
    மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
    சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 9

    அளித்து வந்தெனக் காவஎன் றருளி
    அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில்
    திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே
    வளைக்கை யானொடு மலரவன் அறியா
    வான வாமலை மாதொரு பாகா
    களிப்பெ லாமிகக் கலங்கிடு கின்றேன்
    கயிலை மாமலை மேவிய கடலே 10

                             திருச்சிற்றம்பலம்