திருவாசகம்

  • 29 அருள் பத்து

    29 அருள் பத்து
    பதிகச் சிறப்பு: மகாமாயா சுத்தி
    யாப்பு: ஆசிரிய விருத்தம்

    தலம்: திரு பெருந்துறை
    இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
    இறைவி: யோகாம்பாள்
    இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.

    தலக்குறிப்பு:
    மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    சோதியே சுடரே சூழொளி விளக்கே
    சுரிகுழற் பணைமுலை மடந்தை
    பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
    பங்கயத் தயனுமா லறியா
    நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
    நிறைமலர்க் குருந்தமே வியசீர்
    ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 1

    நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
    கண்ணனே விண்ணுளோர் பிரானே
    ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
    உலகெலாம் தேடியும் காணேன்
    திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 2

    எங்கள்நா யகனே என்னுயிர்த் தலைவா
    ஏலவார் குழலிமார் இருவர்
    தங்கள்நா யகனே தக்கநற் காமன்
    தனதுடல் தழலெழ விழித்த
    செங்கண்நா யகனே திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 3

    கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்
    கண்ணனும் நண்ணுதற் கரிய
    விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன
    வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
    திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 4

    துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
    துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
    பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
    பொங்கொளி தங்குமார் பினனே
    செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 5

    துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
    துதைந்தெழு துளங்கொளி வயிரத்து
    ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில்
    உறுசுவை யளிக்கும் ஆரமுதே
    செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 6

    மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
    மேவலர் புரங்கள்மூன் றெரித்த
    கையனே காலாற் காலனைக் காய்ந்த
    கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
    செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 7

    முத்தனே முதல்வா முக்கணா முனிவா
    மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
    பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
    பரகதி கொடுத்தருள் செய்யும்
    சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 8

    மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
    மறுமையோ டிம்மையுங் கெடுத்த
    பொருளனே புனிதா பொங்குவா ளரவம்
    கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
    தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே 9

    திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
    செழுமலர்க் குருந்தமே வியசீர்
    இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்டு
    என்னுடை எம்பிரான் என்றென்று
    அருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
    அலைகடல் அதனுளே நின்று
    பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
    போதராய் என்றரு ளாயே 10

                             திருச்சிற்றம்பலம்