திருவாசகம்

  • 47 திரு வெண்பா

    47 திரு வெண்பா
    பதிகச் சிறப்பு: அணைந்தோர் தன்மை
    யாப்பு: நேரிசை வெண்பா

    தலம்: திரு பெருந்துறை
    இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
    இறைவி: யோகாம்பாள்
    இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.

    தலக்குறிப்பு:
    மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
    பொய்யும் பொடியாகா தென்செய்கேன்-செய்ய
    திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
    மருவா திருந்தேன் மனத்து 1

    ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
    பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்-தீர்ப்பரிய
    ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
    தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து 2

    செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
    உய்யும் வகையின் உயிர்ப்பறியேன்-வையத்
    திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
    பெருந்துறையில் மேய பிரான் 3

    முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
    பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்-தென்னன்
    பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
    வருந்துயரந் தீர்க்கும் மருந்து 4

    அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
    மறையோனும் மாலுமால் கொள்ளும்-இறையோன்
    பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா
    திருந்துறையும் என்னெஞ்சத் தின்று 5

    பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
    மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை-அத்தன்
    பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
    மருந்திறவாப் பேரின்பம் வந்து 6

    வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
    ஆரா அமுதாய் அமைந்தன்றே-சீரார்
    திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
    ஒருத்தன் பெருக்கும் ஒளி 7

    யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
    யாவர்க்குங் கீழாம் அடியேனை-யாவரும்
    பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
    மற்றறியேன் செய்யும் வகை 8

    மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
    தேவருங் காணாச் சிவபெருமான்-மாவேறி
    வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
    மெய்யகத்தே இன்பம் மிகும் 9

    இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
    திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம்-தருங்காண்
    பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
    மருந்துருவாய் என்மனத்தே வந்து 10

    இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
    துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச்
    சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
    ஊராகக் கொண்டான் உவந்து 11

                             திருச்சிற்றம்பலம்