இலக்கண வகுப்பு -28
தொல்:சொல்: இயல்:இடையியல் -7 ( தொடர்)
1
அடுத்து, ‘ஏ’ கார இடைநிலை பற்றி உரைக்கிறார்.
” தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை யிவ்வைந் தேகா
ரம்மே ” – ( 257)
இ-ள்:
தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை என ஏகாரம் ஐந்தாம் எ-று
எ-டு:
உண்டே மறுமை — தேற்ற ஏகாரம், தெளிவெனினும் ஒக்கும்.
நீயே சொன்னாய்? — வினா ஏகாரம்
அவர்களுள் இவளே அழகி — பிரிநிலை ஏகாரம்
நிலமே நீரே தீயே வளியே வெளியே — எண் ஏகாரம்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே — ஈற்றசை ஏகாரம்
( திருமந்திரப் பாடல்கள், வெண்பாக்கள், அச்சோ பதிகம் ‘ஏ ‘ காரத்தில் நிறைவுறும்)
எ-டு:
” அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் எனையாட் கொண்டபோதே கொண்டிலையோ?
இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்? நானே இதற்கு நாயகமே?
( குழைத்தபத்து)
( அன்றே, குன்றே, போதே என்பன தேற்ற ஏகாரம்.
எம்மானே, நாயகமே = ஈற்றசை ஏகாரம்
கொண்டிலையோ — வினா ஏகாரம்
எனக்குண்டோ — எதிர்மறை ஏகாரம்
” நீயோ பிழை செய்வாய்?”
என வருவித்துப் பொருள் கொள்க. இது எதிர்மறை ஏகாரம்.
2
இனி ‘மற்று ‘ என்ற இடைச்
சொல்.
” மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
அப்பா லிரண்டென மொழிமனார் புலவர் “(262)
இ-ள்:
‘மற்று’ எனும் இடைச் சொல், வினை மாற்றும், அசை நிலையுமென இரண்டாம் எ-று
எ-டு:
” மற்று நீ வன்மை பேசி வன்றொன்டன் எனும் நாமம் ….” (சேக்கிழார்)
” மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தேன் …”(சுந்தரர்)
3
இனி ‘அம்ம’ எனும் இடைச் சொல். இன்று வியப்பு, விளி போன்ற பொருளில் வந்த போதும், ஒன்றைக் கூறி ‘ அதனைக் கேள் ‘ எனச் சொல்லும் பொருளில் வரும் என்கிறார் தொல்காப்பியனார்.
” அம்ம கேட்பிக்கும் ” ( 276)
இ-ள்:
‘அம்ம’ எனும் இடைச் சொல், ஒருவனை ஒருவன் ஒன்று கேள் என்று சொல்லுதற்கண் வரும் எ-று
இவ்விடைச் சொல்லை மணிவாசகர் தனது கோயில் திருப் பதிகத்திலே வைத்துப் பாடியருளுகிறார்:
” புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் ” எனத் தொடங்கி, ” அற்றிலாத வரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே ” என முடிக்கிறார். இப் பதிகத்திலே ‘அம்ம’ நாம் அஞ்சுமாறே ” என்று இடைச் சொல்லை 10 தடவைகள் எடுத்தாண் டுள்ளார்.
(வாழ், வாள் — இரு பாவனை)
— இடையியல் நிறைவு –
4
அடுத்து ‘ உரியியலை ” ஆரம்பம் செய்கிறேன்.
உரிச் சொற்கள் ஆவன செய்யுளுக்கு மட்டுமே உரிமை பூண்டன. செய்யுளில் இசை, குறிப்பு, பண்பு எனும் பொருளை உணர்த்துவதற்கு இவையே உரிமை கொண்டன என்பதனாலேயே ‘உரிச் சொல் ‘ எனப் பெயர் பெற்றது.
இவ்வுரிச் சொற்கள் மூன்று வகைகள் எனப் பாகுபாடுகளைக் கொண்டன.
1
ஒரு பொருள் உணர்த்தும் ஒரு சொல்
2
பல பொருள் உணர்த்தும் ஒரு சொல்
3
ஒரு பொருள் உணர்த்தும் பல சொல்
இவ்வுரிச் சொற்கள் இடைச் சொற்களை ஒருவாறு ஒத்து, தமக்குரிய இயல்போடு, தாம் சார்ந்த பெயரையும் வினையையும் அடியாகக் கொண்டு வெவ்வேறு பொருளை உணர்த்தி நிற்கும் என உரையாசிரியர் உரைப்பர்.
- இவ்வகுப்பு நிறைவு –