Literature Name : Yappu

  • Class 38

    வகுப்பு -38; யா-2
    தமிழ் யாப்பிலக்கண வகுப்பு – 2. தொல்:பொருள்: உவமவியல்; 19-08-2026

    1
    அடுத்து ‘ உள்ளுறை உவமம் ‘. வெளிப்படையாக உவமங்களைக் கூறியமைந்த ஒரு செய்யுளுள்ளே அதற்கான பொருள் உறைந்து -மறைந்து- கிடப்பின் அது ‘உள்ளுறை உவமம் ‘ எனப்படும்.இது பெரும்பான்மையாக அகத்திணைப் பாடல்களிலேயே பயன்படுத்தப்படும். ஆதலால் தொல்காப்பியர் அகத்திணை இயலிலேயே இதற்கு விளக்கம் தருகிறார். அரிமா நோக்காக, அகத்திணை இயலை நோக்க, அங்கு நூற்பா 51 ல் இதைக் குறிக்கிறார்.

    “உள்ளுறுத்து இதனோடு
    ஒத்துப்பொருள் முடிகென
    உள்ளுறுத்தும் உரைப்பதே உள்ளுறை உவமம்” (51)

    இ-ள்:
    உள்ளடக்கிக் கூறப்பட்ட கருப்பொருளை ‘கருதிய பொருள் இதனுடன் ஒன்றுபட்டு முடிக’ என்று உள்ளடக்கிக் கூறுவதே
    ‘ உள்ளுறை உவமமாம்’ எ-று

    இது வினை, பயன், மெய், உரு இவற்றாலன்றிப் பொருள் உவமையாற் கொள்ளப்படுவதாம்.

    எ-டு: (தண்டியலங்கார உதாரண வெண்பா)
    “வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
    குறைபடுதேன் வேட்டும் குறுகும் — நிறைமதுசேர்ந்து
    உண்டாடுந் தன்முகத்தே
    செவ்வி உடையதோர்
    வண்டாமரை பிரிந்த வண்டு “

    இங்கு உவமை உருபுகள் வரவில்லை. உவமைகள் மாத்திரமே காட்டப்பட்டன.
    ஆயின் பொருள் உள்ளுறையாகவே உள்ளது. இது ‘ உள்ளுறை உவமம்’ ஆகும். இதில் ” ஆடவர் வண்டு போன்றவர்கள் ” என்பதே உள்ளுறை உவமப் பொருளாகும்.

    — உவமவியல் நிறைவு —

    ( பொருளதிகாரம், இயல் – 8, ‘ செய்யுளியல் ‘ஆரம்பம்

    இது செய்யுளின் இலக்கணம் கூறுவதால் ‘ செய்யுளியல்’ ஆயிற்று.

    இ-ள்:
    குறிலும் நெடிலும் தனித்து வந்தும், குறிலிரண்டு இணைந்து வந்தும், குறிலின் பின்னர் நெடில் இணைந்து வந்தும், அவை ஒற்றடுத்தும் வரும் முறையினாலே ‘ நேர் நிரை ‘ ஆகலினால், நேரசையும் நிரையசையும் என்றாம் எ-று

    கண்டராதித்தர் திருவிசைப்பா:

    ” சீரான் மல்கு தில்லைச் செம்பொ னம்பலத் தாழி
    தன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் ” என்ற அடியிலே ‘ கோழி வேந்தன் ‘ என்றதை உதாரண வாய்பாடாகக் கொள்வர்.

    கோ = நெடில், ழி = குறில். இவை தனித்து வந்த நேரசைகள்.

    வேந் = வே ( நெடில்) ஒற்றடுத்து வந்த நேரசை

    தன் = த ( குறில்) ஒற்றடுத்து வந்த நேரசை

    இவை நிரையசைகள் :-

    நெறி = இது இணைக் குறில் – நிரையசை

    சுறா = இது குறிலும் நெடிலும் இணைந்து வந்த நிரையசை

    நிறம் = இது ஒற்றடுத்து வந்த நிரையசை

    3
    மேலும் இருவகை அசைகளைத் தொல்காப்பியர் விளக்குகிறார்.

    “இருவகை உகரமோ டியைந்தவை வரினே
    நேர்பு நிரைபு மாகு மென்ப” ( 319)

    இ-ள்:
    குற்றுகரம், முற்றுகரம் ஆகிய இருவகை உகரங்களும் வருநிலைக் கண், அவை நேர்பு நிரைபு எனப் பெயர் பெறும். ( நேர்பசை, நிரைபசை)

    எ-டு:
    காது, காற்று, கன்று, காவு, சார்பு, கல்லு — இவை முற்றுகர நேர்பசைகள்.

    வரகு, அரக்கு, பனாட்டு, கதவு, புணர்வு, வினாவு — இவை குற்றுகர நிரைபசைகள்.

    ( ஒரு நுட்பம் — நேர், நிரை, நேர்பு, நிரை என்பன தமக்குத் தாமே உதாரணங்களாம்)

    4
    ” இயலசை முதலிரண்டு ஏனைய வுரியசை “

    இ-ள்:
    முதலில் கூறப்பெற்ற நேரசைக்கும், நிரையசைக்கும் ‘ இயலசை’ என்றும், பின்னுரைத்த நேர்பசை க்கும், நிரைபசைக்கும்
    ‘ உரியசை ‘ எனவும் பெயராம் எ-று

    • யாப்பிலாக்கண வகுப்பு 2 நிறைவு –

  • Class 37

    வகுப்பு 37, 05-08-2026
    தமிழ் யாப்பிலக்கண வகுப்பு — 1.
    தொல்: பொருளதிகாரம் -இயல் 7 ‘உவமயியல்’

    தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்கள் கொண்டது. இம் மூன்றில் எழுத்ததிகாரம் எழுத்துகளின் இலக்கணங்களையும், பி றப்பிலங்கணங்களையும்,
    புணர்ச்சி இலக்கணங்களையும் எடுத்து விளக்குவதாகும்.

    சொல்லதிகாரமானது சொல் தொடர் இலக்கணங்களையும், தனிச் சொல் இலக்கணங்களையும், விடுபட்ட இலக்கணங்களையும் எடுத்து விளக்குவதாகும்.

    பொருளதிகாரமானது அகத்திணை இலக்கணங்களையும், புறத்திணை இலக்கணங்களையும், யாப்பியல் இலக்கணங்களையும் எடுத்து விளக்குவதாகும்.

    தமிழ் யாப்பிலக்கணம் அகத்தியத்திலேயே ஆரம்பித்து விட்டது. ஆயின் அவை தமிழர்தம் கரங்களிற் கிடைக்காத காரணத்தால், தொல்காப்பியமே யாப்பிலக்கணத்துக்குத் தோற்றுவாய் ஆயிற்று.

    பின்னால் தோன்றிய யாப்பிலக்கண நூல்களுக்கெல்லாம் தொல்காப்பியமே மூல நூலானது என்பர் யாப்பிலக்கணகாரர்.

    அவ்வகையில் பொருளதிகாரத்தில் சொல்லப்பட்ட ஏழாம் இயலான உவமயியலும், எட்டாம் இயலான செய்யுளியலும் இவ்வகுப்புகளில் கற்றலுக்கு எடுத்துள்ளேன்.

    1
    உவமயியல்:

    ஆதிகாலத்தே தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்ற ‘ மூவிலக்கணம் ‘ என வழங்கியது.

    பிற்காலத்தே யாப்பிலக்கணம் வளர்ச்சி பெறவே, ‘ஐந்திலக்கணம்’ ஆனது. அவை:

    எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவே ஐந்திலக்கணமாகும்.

    ஆயின் தொல்காப்பியர் யாப்பு, அணி இரண்டையும் பொருளதிகாரத்திலேயே விளக்கியுள்ளதால், அவரே ‘ஐந்திலக் கணத்தின் ‘ தந்தை என்பர் சான்றோர்.

    2
    உவமை,உவமம் ஒரு பொருள் குறித்தன. ஒரு பொருளை அறியாத ஒருவனுக்கு அதனை அறிவிக்குங்கால், அதனோடு ஒத்த வேறொரு பொருளைக் காட்டி, ‘ இது போலும் இது ‘ எனக் கூறுவதே
    ‘ உவமை/உவமம்’ ஆகும்.

    “வினைபயன் மெய்யுரு என்ற நான்கே
    வகைபெற வந்த உவமத் தோற்றம் ” ( 272)

    இ-ள்:
    தொழிலும், பயனும், வடிவும், வண்ணமும் எனும் நான்கு கூறுபட வரும் உவமத் தோற்றம்” எ-று

    எ-டு:
    புலி போலும் மறவன் — இது வினையுவமை (பாய்தல்)

    மாரியன்ன கை — பயனுவமை ( பயன்பாடு)

    துடிபோலும் இடை — வடியுவமை ( வடிவம்/உருவம்)

    பவளம் போலும் வாய் — வண்ணவுவமை (நிறம்)

    3
    உவமமும், உவமிக்கப்படும் பொருளும் ஒத்து வருதல் வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.

    “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்” (279)

    எ-டு:

    ‘மயிற்றோகை போலும் கூந்தல்’ என்பது உலகத்தார் ஏற்றுக் கொண்டது.’ காக்கைச் சிறகன்ன கருமயிர் ‘ என்பது உலகத்தார் ஏற்றுக் கொள்ளாதது.

    ‘புலி போலப் பாய்ந்தான் ‘ , பூனை போலப் பாய்ந்தான் ‘ என்பனவும் இவ்வாறே கொள்க!

    4
    இனி, உவமை உருபுகள் பற்றி உரைக்கிறார்.

    “அவைதாம்;
    அன்ன வேய்ப்ப வுறழ வொப்ப
    வென்ன மான வென்றவை எனாஅ
    வொன்ற வொடுங்க வொட்ட வாங்க
    வென்ற வியப்ப வென்றவை எனாஅ
    வெள்ள விழைய விறப்ப நிகர்ப்பக்
    கள்ளக் கடுப்ப வாங்கவை எனாஅ
    காய்ப்ப மதிப்பத் தகைய மருள
    மாற்ற மறுப்ப வாங்கவை எனாஅப்
    புல்லப் பொருவப் பொற்பப் போல
    வெல்ல வீழ வாங்கவை எனாஅ
    நாட நளிய நடுங்க நந்த
    வோடப் புரைய என்றவை எனாஅ
    வாறா றவையு மன்ன பிறவுங்
    கூறுங் காலைப் பல் குறிப் பினவே ” ( 282)

    இ-ள்:

    இவை எண்ணப்பட்ட 36 சொற்களும், இவை போல்வன பிறவும் வழக்கிடத்தும், செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பினவாகி வரும் எ-று

    இவையனைத்தும் தொழில், பயன், வடிவு, வண்ணம் ஆகியனவாய்த்
    தனித்தனி வரும். ஆக
    36×4 = 144 என வரும்.

    5
    மேற்படு நான்கு வகை உவமங்களும் எட்டாகியும் வருமாம்.

    “நாலிரண் டாகும் பாலுமா ருண்டே” ( 289)

    இ-ள்:

    நால்வகையாய் நின்று பொருள் தந்த உவமையானது, தொகை நான்கும், அவற்றின் விரி நான்குமென எட்டாகும் எ–று

    எ-டு:
    ‘ புலிப் பாய்ச்சல் – இது உவமத் தொகை
    புலியன்ன பாய்ச்சல் – இது உவமவிரி

    மழைவண்கை – இது உவமத் தொகை மழையன்ன வண்கை – இது உவமவிரி

    வேய்த்தோள் – இது உவமத் தொகை
    வேயன்ன தோள் – இது உவமவிரி

    பவளவாய் – இது உவமத் தொகை
    பவளமன்ன வாய் – இது உவமவிரி

    இவை 8 ஆகின காண்க!
    • வகுப்பு 37 நிறைவு –

  • Class 36

    இலக்கணத் தனிப் பொருள் வகுப்பு – 2, 29-7-2026
    ‘பதம்’

    சென்ற வகுப்பிலே பகுபதம், பகாப்பதம் என்பன பற்றியும், பகுபதத்தின் உறுப்புகள் 6 என்றும், அவையாவன:
    பகுதி, விகுதி, இடை நிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகுமெனவும், இவற்றில் பகுதி, விகுதி, இடைநிலை பற்றிய விளக்கங்களையும் பார்த்தோம்.

    1
    சாரியை :
    பகுபதத்தில் பெரும்பாலும் இடை நிலை, விகுதி ஆகியவற்றிற்கு இடையிலும், சிறுபான்மை பிற இடங்களிலும் வரும் உறுப்பாகும். இது தனியாகப் பொருள் தராது. பகுபதங்களில் சாரியை வரவேண்டும் என்ற கட்டாயமில்லை.

    எ-டு:

    உண்டனன் — உண்+ட்+அன்+அன்.
    இங்கு ‘ட்’ எனும் இடை நிலைக்கும், ஈற்றிலுள்ள ‘ அன்’ எனும் விகுதிக்கும் இடையில் வந்த ‘அன்’ என்பதே ‘ சாரியை ‘ எனப்படும்.

    2
    சந்தி :
    ஒரு பகுபதத்தில் அமைந்துள்ள பகுதியையும், இடைநிலை, விகுதி முதலியவற்றையும் இணைக்கின்ற உறுப்பே
    ‘சந்தி’ எனப்படும். சந்தி பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும். சிறுபான்மை வேறிடங்களிலும் வரலாம். சந்தி வரத்தான் வேண்டும் என்ற கட்டாயம்
    இல்லை.

    எ-டு:

    படித்தான் – படி+த்+த்+ஆன். இங்கு படி யை அடுத்து வந்த ‘த்’ சந்தியாகும். இது ஏனைய உறுப்புகளைப் பகுதியோடு இணைப்பதைக் காண்க.

    3
    விகாரம்-
    பகுதி, சந்தி ஆகிய உறுப்புகளில் உண்டாகும் மாற்றம் ‘விகாரம்’ எனப் படும். விகாரத்திற்கெனத் தனியான உறுப்பு இல்லை.

    எ-டு:
    கண்டான் – கண்+ட்+ஆன்
    இதுவே காண்+ட்+ஆன் என்று வருதலே சரியானதாகும். பகுதி தொழிலை உணர்த்தும் ஏவலாகவே இருக்கும். ஆக மூன்று காலங்களுக்கும் ‘காண்’ என்ற ஒன்றே பகுதியாக இருக்க வேண்டும். இதுவே ‘ விகாரம் ‘ ஆகும்.

    எ-டு:
    நடந்தான் – நட+த்(ந்) + த்+ ஆன். இங்கு பகுதியை அடுத்துள்ள ‘த்’ சந்தியாகும். இச் சந்தியைத் திரிபு செய்யாது எடுத்தால்
    ‘ நடத்தான் ‘ என்றே வரும்.
    ஆனால் ‘ நடந்தான்’ என்பதே சொல் ஆகையினால், ‘த்’ என்ற
    சந்தி, ‘ந்’ எனத் திரிந்து விகாரமடைந்துள்ளது.

    இதே போல ‘ வந்தாள் ‘ :

    வா+த்(ந்) +த்+ஆள் எனும் போதும், ‘த்’ ‘ந்’ ஆகவும், ‘வ’ ‘வா’ ஆகவும் விகாரமடைந்தன கண்டு கொள்க.

    விகாரங்கள் மூன்று வகை:
    தோன்றல் விகாரம்–விகாரம்
    ஒரு சொல்லில் புதியதோர் எழுத்து தோன்றுதல்:
    பூ+கொடி = பூங்கொடி

    திரிதல் விகாரம்:
    ஓரெழுத்து வேறோர் எழுத்தாகத் திரிதல்
    கல்+சிலை = கற்சிலை

    கெடுதல் விகாரம்:
    ஓரெழுத்து இல்லாது கெடுதல்
    மரம்+வேர்= மரவேர்

    -தனிப்பொருள் வகுப்பு நிறைந்தது –

  • Class 35

    இலக்கணத் தனிப் பொருள் வகுப்பு – 1
    ‘ பதம் ‘

    பல மாணாக்கர்களின் வேண்டுகோளுக்கு அமைய இவ்வகுப்பு இடம் பெறுகிறது.
    1
    பதம் என்பது சொல், கிளவி என்பதை ஒத்த சொல்லாகும். ‘ பதம், பகுபதம், பகாப்பதம் ‘ போன்ற சொல்களைத் தொல்காப்பியர் மிகச் சொற்பமே பயன்படுத்தி உள்ளார். ஆயினும் சொல் பற்றிய விளக்கங்களை அவர் சொல்லதிகாரத்தில் விளக்கினார் என்பதை நாங்கள் முன்பே கற்றுள்ளோம். ஆகத் தொல்காப்பியரும், பவணந்தியாரும் பதங்கள் பற்றி உரைத்தவற்றை இப்போது பொதுவாகக் காண்போம்.

    2
    பகுக்கப்படுவது பதம் ஆகும். எழுத்தால் அல்லது எழுத்துகளால் ஆகிப் பொருள் தருவது பதம் ஆகும். இப் பதம் இரண்டு வகை :
    பகுபதம் , பகாப்பதம்

    3
    பகுபதம் :

    ஒரு சொல்லை அதாவது பதத்தை பகுதி விகுதி ஆகிய உறுப்புகளாகப் பகுக்க முடியுமாயின், அது ‘ பகுபதம் ‘ எனப்படும்.

    ஒரு மொழியில் இருப்பது ‘சொல்’, அச் சொல்லின் கூறு ‘ அலகு ‘ எனப் பெயர் பெறும்.

    எ-டு:
    அறிஞன், பாடினான், ஆடினாள், உதித்தான், என்பன பகுபதங்களிற் சிலவாம்.

    அறி + ஞ் + அன்
    பாடு + இன் + ஆள்
    ஆடு+இன் + ஆள்
    உதி + த் + த் + ஆன்
    இவ்வாறு பகுத்த பின்னர் பொருள் தருவது பகுபதமாகும்.

    4
    பகாப்பதம் :

    ஒரு பதத்தினைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால், அது ‘ பகாப்பதம் ‘ ஆகும்.

    எ-டு:

    மரம், கடல், தலை, பூ, தேன், பால், மழை எனப் பலவாம். ஆகப் பிரித்தால் பிரிக்க முடியாதது அல்லது பொருள் தராதது பகாப்பதம், பொருள் தருவது பகுபதம் எனவறிக.

    5
    ஒரு பகுபதத்தைப் பகுக்கும் போது, அது 6 உறுப்புகளாகப் பிரியும். அவை ‘ பகுபத உறுப்புகள்’ எனப் பெயர் பெறும். அவற்றை ஒவ்வொன்றாக நோக்குவோம் :

    1. பகுதி – ஒரு பதத்தின் முதலில் நிற்கும் சொல். இதனைப் பகுக்க இயலாது, ஆதலால் இது பகாப்பதம் எனப்படும்.

    ” தத்தம் பகாப்பதங்களே பகுதி யாகும் ” ( நன்னூல் 134)

    தொல்காப்பியர் பகுதியை ‘ அடிச்சொல்/ வேர்ச்சொல் ‘ எனக் குறித்தார். சில இடங்களில் ‘ முதனிலை ‘ எனவும் குறிக்கப்பட்டது.

    எ-டு:

    கண்ணன் – பகுதி கண்.
    நாடன் – இதன் பகுதி நாடு.
    இவை ‘ பெயர்ப் பகுபதம் ‘ ஆகும். இங்கு பகுதி பெயரை உணர்த்தியது.

    படிப்பான் – படி பகுதி.
    கொன்றான் – கொல் பகுதி.
    தந்தான் – தா பகுதி.
    இவை ‘ வினைப் பகுபதம் ‘
    பகுதி வினையை உணர்த்தியது.

    2
    விகுதி :

    ஒரு பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு ‘ விகுதி ‘ எனப்படும். விகுதியை ‘ இறுதிநிலை’ என்று தொல்காப்பியம் குறிக்கிறது.

    வினைமுற்றுப் பகுபதத்தின் விகுதியானது திணை, பால், எண், இடம், எச்சம், முற்று, வியங்கோள் ஆகியவற்றை உணர்த்தும்.

    “அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம் மார்
    அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
    அம் ஆம் எம் ஏம் ஓமொடு உம் ஊர்
    கடதற ஐ ஆய் இம் மின் இர் ஈர்
    ஈயர் கயவும் என்பவும் பிறவும்
    வினையின் விகுதி பெயரினும் சிலவே “
    ( நன்னூல் 140)

    3
    இடைநிலை :

    ஒரு பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பு
    ‘ இடைநிலை’ ஆம். இது பெயர் இடைநிலை, வினை இடைநிலை என இருவகைப்படும்.

    எ-டு:

    தலைவர் – தலை+வ்+ அர்
    ( வ் காலங்காட்டா இடை நிலை)

    தலைவி – தலை+ வ்+ இ
    இவ்விரண்டும் பெயர்இடைநிலை.

    வினை இடை நிலை – இது மூன்று காலமும் காட்டும். அவை:
    நிகழ்கால இடைநிலை
    இறந்தகால இடைநிலை
    எதிர்கால இடைநிலை.

    ” ஆநின்று கின்று கிறு மூவிடத்தின்
    ஐம்பால் நிகழ் பொழுதறை வினை இடை
    நிலை ” ( நன்னூல் 143. )

    இவை நிகழ்கால இடை நிலைகள்.

    எ-டு:

    ஓடுகிறான் – ஓடு+கிறு+ஆன்

    பேசுகின்றான் – பேசு+கின்று+ஆன்

    பேசாநின்றாள் – பேசு+ஆநின்று+ ஆள்

    இறந்தகால இடைநிலைகள் :

    “தடறவொற் றின்னே ஐம்பால் மூவிடத்து
    இறந்த காலம் தருந்தொழில் இடைநிலை” ( 142)

    எ-டு:

    செய்தான் – செய்+த்+ஆன்
    உண்டான் – உண்+ட்+ஆன்
    தின்றான் – தின்+ற்+ஆன்
    உறங்கினான் – உறங்கு+இன்+ஆன்

    எதிர்கால இடைநிலைகள்:

    ” பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
    இசைவினை இடைநிலை ஆமிவை சில இல ” ( 144)

    எ-டு:

    காண்பான் – காண்+ப்+ ஆன்
    கூறுவாள் – கூறு+வ்+ஆள்

    – வகுப்பு 35 நிறைவு –

  • Class 34

    இலக்கண வகுப்பு – 34
    தொல்:சொல்: இயல் -9
    எச்சவியல்

    1
    பிரிநிலை எச்சம்:

    ”அவற்றுள் பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின”( 431 )

    இ-ள்:
    மேற் சொல்லப்பட்ட எச்சங்களுள், பிரிநிலை எச்சம் ஏகாரப் பிரிநிலை, ஓகாரப் பிரிநிலையுமென
    இரு வகையாம்.

    எ-டு:
    தானே செய்தான், தானோ செய்தான்?
    ” கோவலனே கள்வன் “
    ” என் கேள்வனோ கள்வன்? “

    வினை எச்சம் :

    “வினையெஞ்சு கிளவிக்கு
    வினையும் குறிப்பும்
    நினையத் தோன்றிய முடிபா கும்மே
    ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே “(432)

    இ-ள்:

    வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையும், குறிப்பு வினையும் முடிபாம். ஆண்டு குறிப்பு வினை ஆக்க வினையோடு வரும் எ-று

    எ-டு:
    உழுது வந்தான். மருந்துண்டு தேறினான்.

    பெயரெச்சம் :

    “பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே ” (433)

    இ-ள்:
    பெயரெச்சம் பெயரொடு முடியும் எ-று
    எ-டு:
    உண்ணும் யாசகன்,
    உண்ட யாசகன்,
    வணங்கிய அடியவன்,
    வணங்கும் அம்மையார்,
    எனப் பலவாறு வரும்.

    அபிராமி அந்தாதி :

    “ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
    காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
    சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
    நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே”

    எதிர்மறை எச்சம் :

    ” எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின ” (435)

    இ-ள்:
    ஏகார எதிர்மறையும், ஓகார எதிர்மறையும், உம்மை எதிர்மறையும் ஆகிய மூன்றும் எதிர்மறையான் முடியும் எ-று

    எ-டு:

    யானே ஏற்பேன்? – ஏற்க மாட்டேன்.
    யானோ கள்வேன்? – கள்ளேன்
    வரலும் உரியவன் – வராமைக்கும் உரியவன்.
    மூன்றும் எதிர்மறையான் முடிந்தமை காண்க!

    எனவென் எச்சம் :

    ” எனவென் எச்சம் வினையொடு முடிமே ” (438)

    இ-ள்:
    எனவென்ற எச்சம் வினை கொண்டு முடியும் எ-று

    எ-டு:

    வருக என வரவேற்றான்
    கொள் எனக் கொடுத்தான்.

    என என்றது என்று எனவும் வரும்.

    பட்டினத்துச் சித்தர் பாடல் :

    “ஒன்றென் றிருதெய்வம் உண்டென்றிரு
    உயர் செல்வமெல்லாம் அன்றென் றிரு
    பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும் நன்றென் றிரு
    நடு நீங்காமலே நமக்கிட்ட படி என்றென்று உளமே நினை “

    அப்பர் திருமுறை 6:

    இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
    ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்
    சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்
    தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்
    கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
    கலைமான் மறியேந்து கையா வென்றும்
    அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்
    ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. 1

    சொல்லெச்சம் :

    சொல் மறைந்து நின்று பொருள் தருவது.

    எ-டு:
    ” பசிக்கிறது, சோறு போடுங்கள் “

    குறிப்பெச்சம்:

    குறிப்பால் பொருளை உணர்த்துவது,
    எ-டு:
    “இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த விடத்து ” ( வள்ளுவன் 879)

    இசை எச்சம் :

    பொருளை இசைவாக மறைத்து உரைத்தல்.
    எ-டு
    மகப்பேற்றுக்குத் திகதி குறிக்கப்பட்டோர் பத்துப் பேர் — இது அறிவித்தல், இங்கு பத்துப் பேரும் பெண்கள் என்பது இசை
    எச்சம்.

    இறுதியாக,

    “செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின்கண்
    சொல்லப்பட்ட சொல் எல்லாவற்றையும், தொன்னூல் நெறியிற் பிழையாது சொல்லை வேறுபடுத்தி உணரும் ஆற்றலால் பிரித்துக் காட்டுக “

    என்று புறனடை நூற்பா (463)

    மூலம் உரைத்து, சொல்லதிகாரத்தைத் தொல்காப்பியர் நிறைவு செய்கிறார்.

    • சொல்லதிகாரம் நிறைவு –

    Quiz 31

    1 / 14

    சொற்கள் தொடர்ந்து வரும்போது அவற்றினிடையே வேற்றுமை உருபுகளேனும் இடைச்சொற்களேனும் மறைந்து நின்று பொருள் தந்து, ஓரு சொல் போல வருமாயின், அவை தொகைநிலைத் தொடர்மொழி எனப்படும். இச்சொற்றொடரை தொகைமொழி என்றும் அழைப்பர்.

    2 / 14

    வேற்றுமை உருபோ இடைச்சொல்லோ சொற்றொடருள் தோன்றி பொருள் தந்தால் அது தொகாநிலைத்தொடர் எனப்படும். (தொகை என்றால் தொக்கி வருவது அல்லது மறைந்து வருவது என்று பொருள்

    3 / 14

    தொடர்மொழிகள் புணரும்போது இருவகைப்புணர்ச்சிகள் தோன்றும். அவை வேற்றுமைப்புணர்ச்சி, அல்வழிப்புணர்ச்சி .

    4 / 14

    கண்ணன் பாடினான், தொகைமொழியா தொகாநிலைத் தொடர் மொழியா?

    5 / 14

    கல்லெறிந்தான்  வேற்றுமைத் தொகை? அல்வழித்தொகை ?

    6 / 14

    ‘கூலி வேலை’ இது எவ்வகைப்புணர்ச்சி, எத்தனையாம் வேற்றுமை தொகை?

     

    7 / 14

    ‘தமிழர் பண்பாடு’ இது எவ்வகைப்புணர்ச்சி, எத்தனையாம் வேற்றுமைத்தொகை?

    8 / 14

    ‘தலை வணங்கினான்’ இவ்வாக்கியம்

    9 / 14

    ‘மலைவீழருவி’ – இது

    10 / 14

    ‘கடற்கரை’ –

    11 / 14

    நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையே முதலாம், எட்டாம் வேற்றுமையும் தவிர்ந்த ஏனைய ‘ஐ, அல், கு, இன், அது, கண்‘ என்ற எதாவது ஒரு வேற்றுமை உருபு வெளிப்பட்டோ மறைந்து வரும் புணர்ச்சி வேற்றுமைப்புணர்ச்சி எனப்படும். சொற்றொடரில் வேற்றுமை உருபு மறைந்து வரின் வேற்றுமைத்தொகை எனவும் தோன்றிவரின் வேற்றுமைவிரி எனவும் கூறுவர்.

    12 / 14

    ‘சாத்தன்மகன்’ – எத்த்னையாம் வேற்றுமைத்தொகை?

    13 / 14

    சாத்தன்கை‘ – இது எத்தனையாம் வேற்றுமைத் தொகை?

    14 / 14

    ‘ஊர்நீங்கினவன்’ – எத்தனையாம் வேற்றுமைத் தொகை?

    Your score is

    The average score is 81%

    0%

  • Class 33

    இலக்கண வகுப்பு – 33
    தொல்:சொல்: இயல் 9 – எச்சவியல்

    1
    தொகைகளின் வரிசையில் ‘உம்மைத் தொகை’ பற்றி அறிவோம்:

    “இருபெயர் பல்பெயர் அளவின் பெயரே
    எண்ணியற் பெயரேநிறைப்பெயர்க் கிளவி
    எண்ணின் பெயரோடு அவ்வறு கிளவியும்
    கண்ணிய நிலத்தே உம்மைத் தொகையே ” (417)

    இ-ள்:
    இருபெயர் உம்மை, பல்பெயர் உம்மை, அளவுப் பெயர் உம்மை, எண்ணியற் பெயர் உம்மை, நிறைப்பெயர் உம்மை, எண்ணுப் பெயர் உம்மை ஆகிய ஆறுவகைச் சொற்றிரளும் ‘உம்மைத் தொகையாம் ‘ எ-று

    எ-டு:

    1. இருபெயர் உம்மைத் தொகை– சிவசக்தி. சிவமும் சக்தியும்.
    2. பல்பெயர் உம்மைத் தொகை –புலிவிற்கெண்டை. புலியும் வில்லும் கெண்டையும்.
    3. அளவுப் பெயர் உம்மைத் தொகை — தூணிப்பதக்கு- தூணியும் பதக்கும். நாழியுரி – நாழியும் உரியும்.
    4. எண்ணியற் பெயர் உம்மைத் தொகை — அறுபத்திமூவர் – அறுபதும் மூவரும்.
      முப்பத்து முக்கோடி தேவர் – மூன்று பத்தும் மூன்றும் சேர்ந்த கோடியும்.
    5. நிறைப் பெயர் உம்மைத் தொகை — தொடியரை – தொடியும் அரையும்.
      கிலோகிராம் – கிலோவும் கிராமும்.
    6. எண்ணுப் பெயர் உம்மைத் தொகை — பதினைந்து, பத்தும் ஐந்தும்.

    எ- டு: ( எண்ணும்மை)
    “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் — நித்தம்
    நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
    கொடையும் பிறவிக் குணம் ‘ ( ஔவை)

    “கண்காட்டு நுதலானும்கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானு ம் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே! ” ( ஞானசம்பந்தர்)

    2
    இனி ‘அன்மொழித் தொகை’ பற்றி நோக்குவாம் :


    “பண்பு தொகவரூஉம் கிளவியானும்
    உம்மை தொக்க பெயர்வயி னானும்
    வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்று
    நின்றியலும் அன்மொழித் தொகையே” (418)

    இ-ள்:

    பண்புச் சொல் தொகும் சொல்லினும், உம்மை தொக்க பெயர்க் கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிச் சொற்கள் நின்று நடக்கும் அன்மொழித் தொகை எ-று

    எ-டு:
    வெள்ளாடை — இது பண்புத் தொகை. இது விரியும்போது அன்மொழித் தொகையாகும். ‘ வெள்ளாடை உடுத்தாள் ‘

    அகரவீறு — இது பண்புத் தொகை, ‘ அகரமான ஈற்றையுடைய சொல் ‘ என விரித்ததும் அது அன்மொழித்தொகை.

    பொற்றொடி — வேற்றுமைத் தொகை, விரிக்க ‘ பொற்றொடி வந்தாள் ‘ எனும் போது அன்மொழித்தொகை.

    இவற்றை முறையே,
    பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை,

    வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்று அழைக்கப்படும்.

    “உவமத்தொகை நிலைக்களத்தும், வினைத்தொகை நிலைக் களத்தும் அன்மொழித் தொகை பிறப்பது சிறுபான்மையே என்கிறார் சேனாவரையர்.


    3 இனி வினைமுற்றின் வகைகளையும், அதன் இயல்புகளையும் காட்டுகிறார்.

    முற்றுச் சொல்லிற்கு இலக்கணம் முற்றி நிற்றல் என்பர் சேனாவரையர்.

    “இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச்
    சிறப்புடை மரபின் அம்முக் காலமும்
    தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
    அம்மூ விடத்தான் வினையினும் குறிப்பினும்
    மெய்ம்மையானும் இவ்விரண் டாகும்
    அவ் வாறென்ப முற்றியன் மொழியே” (427)

    இ-ள்:

    முற்றுச் சொல்லாவது, இறப்பு நிகழ்வு எதிர்வு எனும் முக்காலமும், தன்மை முன்னிலை படர்க்கை எனும் மூன்றிடத்தும், உயர்திணை அஃறிணை இருதிணைப் பொதுவுமாகிய பொருள் தோறும், வினையாலும் குறிப்பாலும் இவ்விரண்டாய் வரும் அறுவகைச் சொல்லாம் எ-று

    எ-டு:
    தன்மை — நான் வந்தேன் – இறப்பு
    நான் வருகிறேன் – நிகழ்வு
    நான் வருவேன் – எதிர்வு.

    இவ்வாறே முன்னிலை, படர்க்கை இடங்களுக்கும் கண்டு கொள்க.

    மேலும் வினை முற்றானது, தெரிநிலை வினை முற்று, குறிப்பு வினை முற்று, ஏவல் வினைமுற்று, வியங்கொள் வினை முற்று என நான்காம் என்பதை மனத்தே நிறுத்துக!

    4
    ‘ எச்சச் சொற்கள் ‘ அதன் பாகுபாடுகளை அடுத்து உரைக்கிறார்.

    “பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
    எதிர்மறை உம்மை எனவே சொல்லே
    குறிப்பே இசையே ஆயீ ரைந்தும்
    நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி” (430)

    இ-ள்:

    பிரிநிலை எச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம் என, சொல் குறிப்பு இசை எனச் சொல்லப்பட்ட பத்தும் ‘ எஞ்சு பொருட் கிளவியாம் ‘ எ-று

    இவற்றை ஒவ்வொன்றாக அடுத்த வகுப்பில் கற்போம்!

    • வகுப்பு 33 நிறைவு –
  • Class 32

    இலக்கண வகுப்பு – 32

    தொல்:சொல்: இயல் 9 ‘எச்சவியல்’

    இப்போது ‘ செய்யுள் ஒழிபு ‘ பற்றி நோக்குவோம். செய்யுளுக்குரிய சொல், செய்யுள் விகாரம், பொருள் கோள், வழக்கு முதலாயின செய்யுள் ஒழிபிலடங்குவன.

    1
    ‘ அடுக்கி வரும் சொல் ‘

    “இசைநிறை அசைநிலை பொருளோடு புணர்த லென்று
    அவைமூன் றென்ப ஒருசொல் லடுக்கே” (411)

    இ-ள்:

    இசை நிறையும், அசை நிலையும், பொருள் வேறுபாட்டோடு புணர்வதுமென ஒரு சொல்லடுக்கு மூவகையாம்.

    1. இசை நிறையடுக்கு
    2. அசைநிலையடுக்கு
    3. பொருளொடு புணரடுக்கு

    எ-டு:
    ஏ ஏ ஏ ஏ , ஓ ஓ ஓ ஓ, ஆ ஆ ஆ ஆ– இசைநிறையடுக்கு
    மற்றோ மற்றோ, அன்றே அன்றே — அசைநிலையடுக்கு
    பாம்பு பாம்பு, போம் போம்,
    உண்டு உண்டு — பொருளொடு புணரடுக்கு.

    அடுக்குத் தொடரைப் பிரித்தால் தனிச்சொல் பொருள் தரும். இரட்டைக் கிளவி பொருள் தரா. 4 தடவைகளுக்கு மேல் அடுக்கக் கூடாது.
    மதுரகிரித் திருப்புகழ்:

    ” வந்து வந்து வித்தூறி என்றனுடல்
    வெந்து வெந்து விட்டோட
    நொந்துயிரும் …”

    திருவிசைப்பாவும் ” கற்றவர் விரும்பும்… கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளங் குளிர….” எனப்பாடுகிறது.

    2
    ” தொகை மொழிகள் “
    தொகை மொழிகள் ஆறுவகை என்கிறார்.

    “வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
    வினையின் தொகையே பண்பின் தொகையே
    உம்மைத் தொகையே அன்மொழித் தொகை
    யென்று அவ்வா றென்ப தொகைமொழி நிலையே” (412)

    இ-ள்:
    இங்கு 6 தொகை மொழிகளைச் சுட்டிய தொல்காப்பியர், தனியான நூற்பாக்கள் மூலமாகவும் விளக்கியுள்ளார்.

    தொகை = தொக்கி நிற்பது தொகையாம். உருபு தோன்றா நின்று பொருளுணர்த்துவது.

    — வேற்றுமைத் தொகை, அவ்வேற்றுமை உருபு தொடர்பொருளுணர்த்தி நிற்கும்.

    எ-டு:
    முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதால், அது தொகா. ஆக 2 – 7 வரையான வேற்றுமை உருபுகள் தொக்கி நிற்கும்.

    2 ஆம் வேற்றுமை–
    நிலம் கடந்தான். இது தொகை, இதை விரிக்க,
    நிலத்தைக் கடந்தான் எப வரும்.

    3 ஆம் வேற்றுமை–
    இராமன் மூவர் – இது தொகை. இதை விரிக்க,
    இராமனொடு மூவர்

    4 ஆம் வேற்றுமை —
    கரும்பு வேலி – இது தொகை, இதை விரிக்க,
    கரும்புக்கு வேலி.

    5 ஆம் வேற்றுமைத் தொகை–
    மலைவீழருவி – இது தொகை, விரிக்க,
    மலையின் வீழருவி.

    6 ஆம் வேற்றுமை–
    வள்ளுவன் குறள்- இது தொகை, விரிக்க,
    வள்ளுவனது குறள்.

    7 ஆம் வேற்றுமைத் தொகை–
    தைப்பூசம் – இது தொகை, விரிக்க, தைக்கண் பூசம்.

    ஆக,
    சொற்களிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து நின்று வேற்றுமைப் பொருளை உணர்த்துவது ‘ வேற்றுமைத் தொகை ‘.

    வேற்றுமை உருபு வெளிப்
    பட்டு நிற்பது ‘ வேற்றுமை
    தொடர் ‘
    தொக்க நிற்பது தொகைநிலை, வெளிப்பட்டு நிற்பது தொகாநிலை என்பதும் வழக்காம்.விரிந்த நிலை

    3
    உவமத் தொகை:

    உவமைத்தொகை எனினும் சரி.

    ” உவமத் தொகையே உவம இயல ” (414)

    இ-ள்:

    உவமத் தொகையானது உவமவுருபு தொடர்ப் பொருள் போலப் பொருளுணர்த்தும்

    எ-டு:
    புலி மறவன் — இது உவமத் தொகை.
    புலியன்ன மறவன் — இது உவம உருபுத் தொடர்.

    மயின் மாதர் — இது உவமத் தொகை.
    மயிலொத்த மாதர் — இது உவமவுருபுத் தொடர். இங்கு வரும் உவமவுருபுகள் ‘ இடைச் சொற்கள் ‘ எனவுணர்க.

    உவமவுருபுகளாவன:
    போல, போன்ற, போலும், ஒப்ப, புரைய, மான, கடுப்ப, உறழ, அன்ன, இன்ன, ஒத்த எனப் பற்பல.

    ஆக ஓர் உவமத் தொடரில் உவமானம், உவமேயம், உவமவுருபு என்பன அடங்கும்.

    ” குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்
    …”
    ” பச்சை மாமலை போல்மேனி, பவளவாய் கமலச் செங்கண் …”

    1. ‘ வினைத்தொகை’

    ” வினையின் தொகுதி காலத் தியலும் ” (415)

    இ-ள்:
    வினைத் தொகையானது காலத்தின்கண் நிகழும் எ-று

    வினையை உணர்த்தும் இத் தொகையானது மூன்று காலத்திற்கும் வரும். இங்கு வினையின் காலம் மறைந்து நின்றதால் ‘ வினைத் தொகை ‘ ஆனது

    எ-டு:

    கொல்யானை, ஆடரங்கு, அரிவாள், சுடுசோறு எனப்பல.

    இங்கு வினையும் பெயரும் இணைந்து வந்தமை நோக்குக. வினைத் தொகையைப் பிரித்துப் பொருள் கொள்ளலாகாது.

    ” ஆராத இன்பம் அருளும் மலை போற்றி… ” ( திருவாசகம்)

    ” இல்நுழை கதிரின் துன்னணுப் புரைய ..”

    ” விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க …”

    ” செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம் ” ( சம்பந்தர்)

    5
    பண்புத்தொகை:

    “வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையி னென்று
    அன்ன பிறவும் அதன்குணம் நுதலி
    இன்னது இதுவென வரூஉம் இயற்கை
    என்ன கிளவியும் பண்பின் தொகையே ” (416)

    இ-ள்:

    வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவும், அவை போல்வன பிறவுமாகிய குணத்தை நுதலி, பின் தொக்கவழிக் குணச் சொற் குணமுடையதனை உணர்த்துவதனால், இன்னது இதுவென ஒன்றனை ஒன்று விசேடித்து, இரு சொல்லும் ஒரு பொருளின் மேல் வரும் இயல்பையுடைய எல்லாத் தொகைச் சொல்லும் பண்புத் தொகையாம்
    எ-று

    பண்புத் தொகையும் வினைத்தொகை போலப் பிரிபடாவாம்.

    எ-டு:

    வண்ணப் பண்புத் தொகை– கருங்குதிரை

    வடிவுப் பண்புத்தொகை–
    வட்டப்பலகை

    அளவுப் பண்புத்தொகை–
    நெடுங்கோல்

    சுவைப் பண்புத்தொகை–
    தீங்கரும்பு

    • இவ்வகுப்பு நிறைவு —

  • Class 31

    இலக்கண வகுப்பு – 31
    தொல்:சொல்: இயல் 9 எச்சவியல்

    1
    எச்சவியலுள் ‘ பொருள் கோள் ‘ என்ற பகுதி முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். செய்யுளொன்றைப் புரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகின்ற கருவியே இதுவாகும்.

    கொள்வது கோள். அவ்வாறு கொள்வதே ‘ கொள்கை ‘ ஆனது. இவ்வாறு பொருள் கொள்ளும் முறைகள் நான்கு என்கிறார் தொல்காப்பியர்.

    ” நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
    அவை நான்கென்ப மொழிபுணர் இயல்பே ” (404)

    இ-ள்: இவை நான்கும் செய்யுளிடத்தே தம்முட் புணருமாறு இயல்புடைத்து எ- று

    2
    முதலில் ‘ நிரனிறைப் பொருள்கோள் ‘ பற்றி உரைக்கிறார்.

    “அவற்றுள், நிரல்நிறை தானே வினையினும்
    பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு
    நிலைஇப் பொருள் வேறு நிலையல் ” (405)

    இ-ள்:

    அந்நான்கினுள் நிரனிறையாவது வினையானும், பெயரானும் ஆராயத் தோன்றி ச் சொல் வேறு நிற்பப் பொருள் வேறு நிற்றலாம் எ-று

    இதனூடே, நிரனிறைப் பொருள் கோளாவது, வினைச் சொல்லால் வருவதும், பெயர்ச் சொல்லாய் வருவதும் , அவ்விரு சொல்லால் வருவதும் என மூன்று வகையாம். ஆக வினைச் சொற்களையும், பெயர்ச் சொற்களையும் ஒரு நிரலாயும், அவை கொள்ளும் பொருளை மற்றுமொரு நிரலாயும் நிறுத்திப் பொருள் கொள்ளும் முறையே ‘ நிர னிறைப் பொருள் கோள் ‘ முறையாகும். copied

    எ-டு:
    வினை நிரனிறை :

    ” மாசு போகவும் காய்பசி நீங்கவும்
    கடிபுனல் மூழ்கி அடிசில் கைதொட்டு “

    இச் செய்யுளில்.

    மாசு போக – வினை
    காய்பசி நீங்க – வினை
    கடிபுனல் மூழ்கி – வினை
    இவ் வினைகளை உரிய பெயர்களுடன் நிரனிறை செய்ய;

    ” மாசு போகக் கடிபுனல் மூழ்கி, காய்பசி நீங்க அடிசில் கைதொட்டு ” என வந்தியையும்.

    பெயர் நிரனிறை :
    ” கொடி குவளை கொட்டை நுசுப்பு உண்கண் மேனி
    மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை
    நடை நோக்கும் சாயல் வடிவினளே வஞ்சி மகள் “
    ( யா/கா, மேற்கோள்)

    இச் செய்யுளில் 9 பெயர்ச் சொற்கள் வந்தன. ஆதலான் இது ‘ பெயர் நிரனிறை “.

    இப் பெயர்களை உரிய உரியவற்றுடனும், வினையோடும் நிரனிறை செய்ய, இப்படிப் பொருளுடன் அமையும்:

    ” நுசுப்பு கொடி, உண்கண் குவளை, மேனி கொட்டை, முகம் மதி, வாய் பவளம், முறுவல் முத்து, நடை பெண் யானை, நோக்கு பெண்மான், சாயல் மயில்,


    — இவ்வளவும் ஒன்றாய் அமைந்த வடிவு கொண்டவளே வஞ்சி நாட்டுப் பெண் என்பதே பொருளாகும்.

    3

    அடுத்து ‘ சுண்ணப் பொருள்கோள் ‘

    “சுண்ணம் தானே
    பட்டாங் கமைந்த ஈரடி எண்சீர்
    ஒட்டுவழி அறிந்து துணித்தனர் இயற்றல் ” (406)

    இ-ள்:

    சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக்கண் உளவாகிய எண்சீரைத் துணித்து, இணையும் வழியறிந்து சுட்டி இயற்றப்படுவதாம் எ-று copied

    எ-டு:

    ” சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
    யானைக்கு நீத்து முயற்கு — நிலையென்ப
    கானக நாடன் சுனை “
    ( பழமொழி 400, சிந்தடி வெண்பா)

    இதனைச் சுண்ண முறையிற் பொருள் கோட இவ்வாறு வரும் :

    ” சுரை மிதப்ப அம்மியாழ வரையனைய
    யானைக்கு நிலை முயற்கு — நீத்து என்ப
    கானக நாடன் சுனை “

    சந்தனக் குழம்பு போல சிதறிப் பரவிக் கிடத்தலால், ‘ சுண்ணம் ‘ என்றார்.

    ப-ள் :
    ( வரை – மலை. கானகநாடன் – காட்டை நாடாகவுடைய தலைவன்.
    சுனை – மலையருவி, நீரூற்று)

    4
    இனி ‘ அடிமறிப் பொருள் கோள் “:

    ” அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
    சீர்நிலை திரியாது தடுமா றும்மே ” (407)

    இ-ள்:

    அடிமறிப் பொருள் கோளாவது, சீர் நின்றாங்கு நிற்ப, அடிகள் தத்த நிலையில் திரிந்து ஒன்ற, நிலைக் களத்து ஒன்று சென்று நிற்கும் எ-று ஆக எல்லாவடிகளும் எவ்விடமும் சென்று பொருந்திப் பொருள் கொள்ளும். copied

    எ-டு:

    “மாறாக் காதலர் மலைமறந் தனரே
    யாறாக் கட்பனி வரலா னாவே
    ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே
    கூறாய் தோழி யான்வாழு மாறே ” ( குறுந்தொகை)

    இது நாலடிச் செய்யுள்களுக்கே பெருமளவு பொருந்தி வரும்.

    5
    இனி ‘ மொழிமாற்றுப் பொருள் கோள் ‘

    “மொழிமாற் றியற்கை சொல்நிலை மாற்றிப்
    பொருளெதிர் இயைய முன்னும் பின்னும்
    கொள்வழிக் கொளாஅல் ” (409)

    இ-ள்:

    மொழிமாற்றின் இயல்பானது, பொருள்எதிர் இயையுமாறு சொல் நிலையை மாற்றி,
    முன்னும் பின்னும் கொள்ளும்வழி கொண்டு கொளுவுதலாம் எ-று

    எ-டு;

    “ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும்
    பாரி பறம்பின்மேல் தண்ணுமை — காரி
    விறன்முள்ளூர் வேங்கைவீ தான்நாணும்
    தோளான் நிறனுள்ளூர் உள்ளது அலர் ” ( புறப்பாட்டு)

    ப- ள்:

    ( பறம்பு – மலை. தண்ணுமை – முழவு, போர்
    முரசு. காரி – மலையமான் திருமுடிக்காரி. முள்ளூர் – மலைப்பகுதி. வீ – பூக்கள்.
    வேங்கை – மரம். நிறன் – நிறம். அலர் – பழிச்சொல்)

    இதனை ‘ மொழிமாற்றுப் பொருள் ‘ கோட இவ்வாறமையும்:

    ” பாரி பறம்பின்மேல் தண்ணுமை தான்நாணும் தோளான்
    நிறன் விறன்முள்ளூர் வேங்கை வீ நாணும்
    உள்ளூர் அலர் ஆரிய மன்னர் பறையில் எழுந்தியம்பும் “

    • இவ் வகுப்பு நிறைவு —

  • Class 30

    இலக்கண வகுப்பு – 30, தொல் : சொல்:

    இயல் – 9 ” எச்சவியல்”

    தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திலே முதல் இயலான
    ‘கிளவியாக்கம் ‘ முதற் கொண்டு, ‘உரியியல்’ வரையான 8 இயல்களிலும் தொல்காப்பியர் சொல்லாது விட்டவற்றையும், அதாவது எஞ்சி நின்ற இலக்கணப் பொருளை ஒன்றாகத் தொகுத்து, அவற்றை எச்சங்கள் எனக் குறிப்பிட்டு, அவற்றை விளக்குகின்ற இந்த இயலை ‘எச்சவியல் ‘ எனப் பெயர் குறித்தார்.

    இவ்வியலில் எச்சங்களுடன், செய்யுளுக்கான சொல், அவற்றின் இலக்கணம், செய்யுள் விகாரம், பொருள் கோடல் போன்ற விடயங்களும் கூறப் பட்டுள்ளன என அறிகிறோம்.

    1 தலைச்சூத்திரம் யாது நுதலிற்று? நால்வகைச் சொற்களை நுதலிற்று “

    “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் லென்று
    அனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” (397)

    இ-ள்:
    இயற்சொல்லும், திரி சொல்லும், திசைச் சொல்லும், வட சொல்லும் என அத்துணையே செய்யுள் ஈட்டுதற்குரிய சொல்லாவன எ-று

    இதற்குச் சேனாவரையர் உரை செய்கையில் “இந் நான்கு சொல்லுமே செய்யுட்குரியன, பிற பாடைச் சொல் உரிய வல்லவென்று வரையறுத்த வாறு” என்றதனைக் கருத்திற் கொள்க !

    தொல்காப்பியர் ஏற்கனவே பெயரும் வினையும் எனச் சொற்கள் இரண்டு என்றும், அவற்றின் மருங்கில் இடை, உரி எனப் பெயரளவில் சூத்திரம் சொன்னவர், இங்கும் நான்கு சொற்களைக் கூறி, அவை ‘ செய்யுளுக்கு உரித்தானவை ‘ என்பதை உற்று நோக்க வேண்டும்.

    இயற் சொல்லினுடைய பாகுபாடுகளே அந்நான்கு சொல்வகைகள் எனவறிக!

    2
    இயற்சொல்லாவது:

    “அவற்றுள்; இயற்சொற் றாமே செந்தமிழ்
    நிலத்து வழக்கொடு சிவணித்
    தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே” (398)

    இ-ள்:
    அந் நான்கனுள் இயற்சொல் என்று சொல்லப்பட்ட சொற்றாம், செந்தமிழ் நிலத்தும், கொடுந்தமிழ் நிலத்தும் தம்பொருள் வழுவாமல் உணர்த்தும் சொல்லாம் எ – று

    எ-டு:
    நிலம், நீர், சோறு, கூழ், பால், தயிர், மக்கள், தெங்கு, மா, கமுகு எனப் பலவாம்.

    செந்தமிழ் நிலமாவது — செம்மையும் சீரும் கொண்ட, இலக்கண இலக்கியங்களால் செந்தமிழ் மொழி வழக்கிலுள்ள நிலப் பகுதியாகும்.

    கொடுந்தமிழ் நிலமாவது — செந்தமிழ் நிலம் போலன்றி, அயன் மொழிகளும், பிற மொழிகளும் கலந்து திரிபடைந்த மொழியைப் பேசும் வழக்கிலுள்ள நிலப்பகுதி ஆகும்.

    ஆக, திரிபு இல்லாமல் இயல்பினாலாய சொற்களே ‘ இயற்சொல் ‘ எனத் தெளிக!

    3
    இனி ‘ திரிசொல் ‘ யாது?

    “ஒருபொருள் குறித்த வேறு சொல்லாகியும்
    வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும்
    இருபாற் றென்ப திரிசொற் கிளவி” (399)

    இ-ள்:

    ஒரு பொருளையே குறித்து வருகின்ற பல சொல்லும், பல பொருளைக் குறித்து வருகின்ற ஒரு சொல்லுமென்று திரி சொல் இருவகைத்தாம்
    எ-று

    எ-டு:

    ஒரு பொருட் குறித்த பல/வேறு பெயர்க் குளவி —
    வெற்பு, விலங்கல், விண்டு : மலை

    வேறு பொருள் குறித்த

    • பல – ஒரு சொல் — எகினம் : அன்னம், கவரிமா, புளிமா, நாய்
    • மேலும்,
      உந்தி : கொப்பூழ், தேர்த் தட்டு, கான்யாறு.

    திரிதல் என்றால் உறுப்புத் திரிதலும், முழுவதும் திரிதலுமாம்.

    4
    அடுத்து, திசைச்சொல் பற்றி உரைக்கிறார்:

    “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
    தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி ” (400)

    இ-ள்:
    செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த 12 நிலத்தும் தான் குறித்த பொருள் விளக்கும் திசைச் சொல் எ-று

    ( தொல்காப்பியர் காலத்தே அவர் குறிப்பிட்ட 12 நிலங்களும், 12 ஆம் நூற்றாண்டில் தொல் காப்பியத்திற்கு உரை செய்த சேனாவரையர் கூறி 12 நிலங்களும் வெவ்வேறு பெயருடையன என உரைவல்லோர் உரைப்பர்.

    இன்னோர் முடிவுகளின் படி, குமரியின் தென்கரையே அமைந்த பழந்தீபமும், கொல்லமும், கூபகமும், சிங்களமும், கொங்கணமும், துளுவும், குடகமும், குன்றகமும், கருநடமும், வடுகுவும், தெலிங்கும், கலிங்கும் ஆகியன 12 நிலங்களாகக் கொள்ளப்பட்டன எனவறிக)

    எ-டு:

    பசு/எருமை — பெற்றம்
    தந்தை — அச்சன்
    தாய் — தள்ளை
    கிணறு — கேணி
    விழா — பண்டிகை ( தெலுங்கு)
    திறப்பு — சாவி ( போர்த்துக்
    கேயம்)
    காலணி ( மெட்டி) — கொலுசு — ( தெலுங்கு )

    5
    அடுத்து, வடசொல் பற்றிய விளக்கம்:

    “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
    எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (401)

    இ-ள்:

    வடசொற் கிளவியாவது, வடசொற்கே உரியதெனப்படும் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொதுவான எழுத்தான் இயன்ற சொல்லாம் எ-று

    எ-டு :
    வாரி, மேரு, குங்குமம். மநு, — இவை அவ்வாறே வந்து தமிழில் வழங்கும் சொற்கள், இவை ‘ தற்சமம் ‘ எனப்படும்.

    தவிர நேரே தமிழில் கலக்காமல், தமிழின் தனித் தன்மை கெடாது, தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட சொற்களுமுள. அவை ‘ தற்பவம் ‘ எனப்படும்.

    பாடை, வருடம், கட்டம், இலக்குமி போன்றனவாம்.

    6
    இனி ‘ விகாரம் ‘ என்பது என்ன எனப் பார்ப்போம்;

    நான்கு வகைச் சொற்களும், செய்யூளீட்டச் சொல் எனும் போது, அவை ‘ விகாரம் ‘ அடைகின்றன எனத் தொல்காப்பியர் கூறுகிறார்.

    “அந்நாற் சொல்லும் தொடுக்கும் காலை
    வலிக்கும்வழி வலித்தலும்
    மெலிக்கும்வழி மெலித்தலும்
    விரிக்கும்வழி விரித்தலும்
    தொகுக்கும்வழி தொகுத்தலும்
    நீட்டும்வழி நீட்டலும்
    குறுக்கும்வழி குறுக்கலும்
    நாட்டல் வலிய என்மனார் புலவர் ” (403)

    இ-ள்:

    இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கு சொல்லையும் செய்யுளாகத் தொடுக்கும் போது, மெல்லினம் வல்லினமாதலும், வல்லினம் மெல்லினமாதலும், குறைவதை விரித்தலும், தொகுக்க வேண்டின் தொகுத்தலும், நீட்ட வேண்டின் நீட்டலும், குறிலினை நெடித்தலும் என விகாரம் அறுவகையாம். செய்யுளீட்ட வல்லார் இதை நிலை நாட்டுவர் எ-று

    எ-டு:

    குறுங்கை – குறுக்கை ( இது வலித்தல் விகாரம்)

    மட்பாவை – மண்பாவை ( இது மெலித்தல் விகாரம்)

    கொன்றைத்தார் – கொன்றையந்தார் ( இது விரித்தல் விகாரம்)

    மழவரை ஓட்டிய முருகன் –
    மழவரோட்டிய முருகன் ( இது தொகுத்தல் விகாரம்)

    பச்சிலை – பாசிலை ( இது நீட்டல் விகாரம்)

    தீயேன் – தீயென் /தியேன் ( இது குறுக்கல் விகாரம்)

    — இவ் வகுப்பு நிறைவு —

  • Class 29

    இலக்கண வகுப்புக -29

    தொல்:சொல்: உரியியல்-8

    சென்ற வகுப்பில் ‘ உரியியல்’ ஆரம்பிக்கப்பட்டது. இவ் வுரிச் சொற்கள் பற்றித் தொல்காப்பியர் கூறுமாற்றை நோக்குவோம்.

    1
    ” உரிச்சொற் கிளவி விரிக்கும் காலை
    இசையினும் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
    பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
    ஒருசொல் பலபொருட்டு உரிமை தோன்றினும்
    பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்
    பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்
    தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்
    எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல் “
    (297)

    இ-ள்

    உரிச் சொல்லானது இசை, குறிப்பு, பண்பு என்ற மூன்று பொருளிலும் தோன்றும்.

    இசை என்பது– செய்யுளின் இசைவு, ஓசைநயம், சந்தம் போன்றன.

    குறிப்பென்றது — மனத்தினால் குறித்துணரப்படுவன.

    பண்பென்றது — பொறியால் உணரப்படும் குணம்.

    பெயர்ச் சொல்லிடத்தும், வினைச் சொல்லிடத்தும் தமது உருபுகள் முன்பின் வருதலையே ‘ தடுமாறி ‘ என்றார்.

    2
    தொல்காப்பியர் தனது நூற்பாக்களினூடே குறிப்பிட்ட ‘ உரிச் சொற்கள் ‘ ஏறக்குறைய 128 எனக் கூறி விளக்கி யுள்ளார். அவையாவன இவை :-

    உறு தவ. நனி உரு புரை
    கெழு குரு ஏ. முழ. குழ. என்பனவும் பலவும் உரிச் சொற்களாகும்.

    3
    ” உறுதவ நனியென வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொரு ளென்ப “
    (299)

    இ- ள்:

    உறு தவ நனி என்பன மிகுதி ( அதிகம், பெரிய) என்னும் குறிப்புப் பொருள் உணர்த்தும் எ-று இது ஒரு பொருள் குறித்த பல சொல்.

    எ-டு:

    ” அடக்க முடையா ரறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா — மடைத்தலையில்
    ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
    வாடி யிருக்குமாம் கொக்கு ” ( மூதுரை- 16)

    நனி உண்டான் — அதிகம் உண்டான்

    சாலச் சிறந்தன — மிகவும் சிறந்தன

    பல பொருள் குறித்த ஒரு சொல் —
    எ-டு
    கடி = கடிமணம், கடிவாள், கடிமனை, கடிமலர்

    4
    ” பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே ” ( மகாகவி)

    5
    மேலும் ‘ உரிச் சொற்கள் ‘ பயின்று வரும் திருக்குறள்கள் பலவுள்ளன.

    ” கடிதோச்சி மெல்ல எறிக
    நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர் “
    (562)

    ” கல்லா தவரும் நனி நல்லர் கற்றார்முன்
    செல்லா திருக்கப் பெறின்” (403)

    ” பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
    செய்தாங்கு அமையாக் கடை ” ( 803)

    ” பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான் ” ( 972)

    மேற்கண்ட குறள்களில் பயின்று வந்த உரிச் சொற்களின் பொருள் காண்போம் :

    கடிதோச்சி — அளவிறந்து

    நனிநல்லர் — மிக நல்லவர்

    கெழுதகைமை — உடம்படும் இயல்பு

    யான் — ஆல் என்றது ஆன் ஆகி யான் என்ற உரிச்
    சொல்லாய் வந்தது.

    6
    சால – உரிச்சொல் ‘ அளவின் அதிகத்தைக் குறிக்கும்,

    திருவாசகம்:

    ” பால் நினைந்தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ ….” ( பிடித்த பத்து)

    உறு — உரிச்சொல் இங்கு பெரிய என்ற பொருளில் வந்தது,

    ” இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் ….”
    ( சம்பந்த ப் பெருமான்)

    கடி — உரிச்சொல் இங்கு உறுதியான என்ற பொருளில் வந்தது,

    ” காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக ..”
    ( அப்பர் பெருமான்)

    — இவ் வகுப்பு ( உரியியல்) நிறைவு —